தாம்பரத்தை அடுத்த நெமிலிச்சேரி பவானிநகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் ஒரே மகள் சுபஸ்ரீ. தனியார் கல்லூரியில் பி.டெக் படித்த இவர், பெருங்குடி, கந்தன்சாவடியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, பள்ளிக்கரணை ரேடியல் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த பேனர், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழ, அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியின் டயரில் சுபஸ்ரீ சிக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், உயிருக்குப் போராடினார். உடனடியாக அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுபஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

jk

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்த சுபஸ்ரீயின் தந்தை ரவி கூறுகையில் ''சுபஸ்ரீ எனக்கு ஒரே பொண்ணு. அவளை மிகவும் ஆசையாக வளர்த்தேன். அவள் விருப்பப்படியே பி.டெக் படிக்க வைத்தேன். அவளுக்கு கனடா சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காக தேர்வும் எழுதி இருந்தாள். விரைவில் கனடா செல்ல இருந்த ஆசை மகளுக்கு இப்படி ஒரு துயரம் வரும் என கனவிலும் நினைக்கவில்லை. பேனர் தான் எனது மகளின் உயிரை பறித்து விட்டது. எனது மகளின் உயிரே கடைசியாக இருக்கட்டும்'' என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.