“செயற்கையாக, சவால்விடும் தொனியில் பொய்பொய்யாகப் பேசிவரும் அரசியல் தலைவர்களை டிவி ஸ்க்ரீனில் பார்க்கும்போது, என்னையும் அறியாமல் டென்ஷன் ஆகி, ரத்த அழுத்தம் கூடிவிடுகிறது.” என்றார் அந்த ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர். ‘இதையெல்லாம் சகித்துக்கொள்ளவில்லை என்றால், தங்களின் உடல்நலம்தானே கெடும்? பிடிக்காத விஷயத்தை மனதுக்குள் கொண்டு செல்லாதீர்கள். கடந்துவிடுங்கள்.’ என்றபோது, “அடப் போங்க தம்பி, அரசியல் தலைவர்களுக்கு இல்லையென்றாலும், நாட்டு நலன் குறித்த அக்கறை எனக்கு இருக்கிறதே?” என்றார் பொறுப்புணர்வுடன்.
ஆசிரியரை டென்ஷன் ஆக்கியவர் யார் தெரியுமா? நமது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். ‘அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த யார் நினைத்தாலும் எதிர்க்கும் முதல் நபராக நான் இருப்பேன்.’ என்று அவர் ஸ்டேட்மெண்ட் விட்டதுதான் அவருக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த ஆசிரியர் –
“அன்றைய அதிமுக தலைமை கட்டவிழ்த்துவிட்ட வன்முறை தொடங்கி, ஊழல் செய்து சொத்துக்களைக் குவித்து தண்டனை பெற்றதுவரை, அத்தனையுமே கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம்தான். எதிர்த்தாரா இந்தப் பன்னீர்செல்வம்? சரி, இவராவது நேர்மையே உயிர்மூச்சு என்று வாழ்பவரா? என்று பார்த்தால், அதுவும் இல்லை. அதிமுக ஆட்சியில், ஓ.பி.எஸ். உட்பட அமைச்சரவையில் உள்ள பலர் மீதும் எந்தப்பக்கம் பார்த்தாலும், குற்றச்சாட்டுக்களும் வழக்குகளுமாக உள்ளன. குட்கா ஊழல் நாறிக்கொண்டிருக்கிறதே? சம்பந்தப்பட்டவர்களை ஓ.பி.எஸ். ஒன்றும் எதிர்க்கவில்லையே? ஒருவேளை, இப்படி நினைக்கிறாரோ? நாங்கள் ஊழல் செய்வோம்; சொத்துக்களைக் குவிப்போம்; வழக்குகளையும் சந்திப்போம். ஆனால், இதுகுறித்து வேறு எந்த அரசியல் தலைவரும் யாரும் வாய்திறக்கவே கூடாது. அப்படி பேசுவது, அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற செயல். இதைத்தான் எதிர்க்கிறாரோ?
ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து, தர்மயுத்தம் என்று ‘பில்ட்-அப்’ தந்து ‘அமைச்சரவையில் உங்களோடு நானும் ஒட்டிக்கொள்கிறேன்; துணை முதல்வர் பதவியாவது தந்துவிடுங்கள்’ என்று ‘டிமாண்ட்’ வைத்து, துணை முதல்வர் ஆனவர் அல்லவா ஓ.பன்னீர்செல்வம்? தங்களைக் காட்டிலும் அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் யார்? என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.” என்றார் சீரியஸாக.
தியாக உள்ளம் கொண்ட நல்ல தலைவர்களை வரலாறு போற்றுகிறது. ஊழல் செய்து, சொத்துக்களைக் குவிப்பதற்காகவே அரசியலில் வேரூன்றி உள்ள இன்றைய தலைவர்களை ……………………………………. கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளவும்.
அதிமுக ஆட்சிக்கு களங்கம்! - ஓ.பி.எஸ். ஆத்திரம்!
சார்ந்த செய்திகள்
Next Story
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!
விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.
அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
Next Story
குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!
கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர் தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.