Skip to main content

வேட்டி, சட்டை, புடவை, தடுப்பூசி; உதயநிதி தொகுதியில் அசத்தல் பொங்கல்!

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

தி.மு.க.வின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், “எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சமில்லாத ஆட்சியை வழங்குவோம்” என்றார். அவரது மகனும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, இதனை மெய்ப்பிக்கும் வகையில் தனது தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறார்.

 

தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்களை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி. வீடு வீடாகக் கணக்கெடுக்கப்பட்டு மளிகைப் பொருட்களை வழங்கி வந்த நிலையில், கரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடுவது தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, தொகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொண்டார் உதயநிதி. குறிப்பாக, எளிய மக்கள் வாழும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

 

ஒவ்வொரு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர், அவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர், தடுப்பூசி போட்டுக் கொண்டவர் எத்தனை பேர், எந்த தேதியில் போடப்பட்டது என்ற விவரம் அனைத்தும் வீட்டு வாசலில் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொண்ட குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்கள் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. சேப்பாக்கம் தொகுதியின் நடைமுறையைப் பார்த்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது பற்றி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுப் பேசினார். வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டமும் மாநில அளவில் அறிவிக்கப்பட்டது.

 

தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஏறத்தாழ 95% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்கள். 70%க்கு மேல் இரண்டாவது டோஸ் போட்டுள்ளனர். 1 லட்சத்து 30 ஆயிரம் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில், பொங்கல் விழாவையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கும், திமுகவினருக்கும் பொங்கல் பரிசுகளை வழங்குமாறு மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுகவினர்களான ஏறத்தாழ 5000 பேருக்கு பொங்கலுக்கான துணிமணிகளுடன் காலண்டரையும் வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி. அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தவர், தொகுதி வாக்காளர்களிடமும் அந்த மகிழ்ச்சியை எதிர்பார்த்து, அனைவரது குடும்பத்தினருக்கும் புடவை, வேட்டி, சட்டை வழங்க முடிவு செய்தார்.

 

வாக்காளர்களின் குடும்பங்களுக்கு கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே டோக்கன் வழங்க, அதனடிப்படையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சேப்பாக்கம் பகுதியில் மூன்று வார்டுகள், திருவல்லிக்கேணி பகுதியில் மூன்று வார்டுகள் என உதயநிதியே நேரடியாகச் சென்று பொருட்களை வழங்குகிறார். இல்லத்தரசிகளானப் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

 

பொங்கல் பரிசு பெறுபவர்களிடம், “தடுப்பூசி போட்டாச்சா?” என்று கேட்டு, விழிப்புணர்வைத் தொடர்ந்து மேற்கொள்கிறார் உதயநிதி. தற்போது போடப்பட்டு வரும் 15-18 வயதுள்ளவர்களுக்கான தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி பற்றியும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. மகிழ்ச்சியும் விழிப்புணர்வும் சேர்ந்து பொங்குகிறது உதயநிதி தொகுதியில்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதே போன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளார் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு. எனவே ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். தி.மு.க. தொண்டர்கள் பொறுப்பேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் 100 ஆவது பிறந்த நாள் முடிந்து 101 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். நாம் அவருக்கு கொடுக்க கூடிய பரிசாக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனப் பேசினார்.

Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

முன்னதாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி இல்லத்தில் இருந்து ‘மாநில உரிமைகளை மீட்க தலைவரின் குரல்’ 2 ஆம் கட்ட நாடாளுமன்ற பிரச்சாரப் பயணத்தை துவக்குவதில் பெருமை கொள்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக. தலைவர் தலைமையில் திராவிட மாடல் அரசு வெல்லட்டும். பாசிசம் ஒழியட்டும். BELONG TO THE DRAVIDIAN STOCK” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநில சுயாட்சியின் உரிமைக்குரல் நம் அண்ணாவின் மண்ணில், பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

புதிய வாக்காளர்களுக்கு சூரி சொன்ன அறிவுரை

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
soori advise to first time voters

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் நேற்று திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூரி பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தனது படங்கள் குறித்துப் பேசிய சூரி, “விடுதலை 2 இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பு இருக்கு. எனக்கான போர்ஷன் முடிஞ்சிருச்சு. சீக்கிரம் வெளியாகவுள்ளது. விடுதலைக்கு முன்னாடி கருடன் வந்துவிடும். அந்த பட படப்பிடிப்பு அனைத்தும் முடிஞ்சிருச்சு. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடந்துக்கிட்டு வருகிறது. அதுவும் விரைவில் வரும். கண்டிப்பா விடுதலை மாதிரி கருடன் படமும் எல்லாருக்கும் புடிக்கும். ஒரு நல்ல படமா இருக்கும்” என்றார். 

அவரிடம் உதயநிதி மதுரையில் பிரச்சாரத்திற்கு வந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார். நடைபெறவுள்ள தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு தேர்தலும் அதன் ரிசல்ட்டு வந்த பிறகுதான் தெரியும். நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். மக்களுக்கு நல்லதாக அமைந்தால் இன்னும் சந்தோஷம்” என்றார். 

உதயநிதி பிரச்சாரத்திற்கு அழைத்தாரா என்ற கேள்விக்கு, “அவர் என்னை அழைக்கவில்லை. நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பேன் என அவருக்கு தெரியும்” என்றார். புதிய வாக்களர்களுக்கு நீங்க சொல்லக்கூடிய விஷயம் என்ன என்ற கேள்விக்கு, “கன்னி சாமி மாதிரி எல்லாரும் கன்னி ஓட்டுக்கு ரெடியா இருக்காங்க. ஒவ்வொரு ஓட்டும் சாதாரணமானது கிடையாது. நாட்டின் வளர்ச்சிக்கான ஓட்டு. நம்முடைய வாழ்க்கைக்கான ஓட்டும் கூட. அதை கணிச்சு, யாருக்கு போடணுமோ அவர்களுக்கு போடுவாங்க என நம்புறேன்” என்றார்.