Study of Minister Udayanidhi Stalin in rain

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வி.பி. ராமன் சாலையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எனப் பலரும் உடன் இருந்தனர்.