Skip to main content

பள்ளியில் அட்டூழியம் செய்யும் தலைமையாசிரியரின் கணவர்; கொதித்தெழுந்த பெற்றோர்கள்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

students parents have accused the headmaster husband of interfering in school affairs

 

ஈரோடு பழையபாளையத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 106 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக அமுதா என்பவர் இருந்து வருகிறார். மேலும் ஒரு உதவி தலைமை ஆசிரியர் மற்றும் கூடுதலாக ஒரு ஆசிரியர் என மூன்று பேர் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில் தலைமை ஆசிரியை அமுதா பள்ளிக்கு தாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மாணவ மாணவிகளுக்கு முறையாக கல்வியை கற்பிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. தலைமையாசிரியை அமுதாவின் கணவர் பாபு என்பவர் பள்ளிக்கு அடிக்கடி வருவதும், பள்ளி விவகாரத்தில் தலையிடுவதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பள்ளியில் பெற்றோர்களுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பெற்றோர்கள் அமர்வதற்காக வகுப்பு அறையில் இருந்து பெஞ்சுகள் எடுக்கப்பட்டது. இதை தலைமை ஆசிரியையின் கணவர் கண்டித்து பெற்றோர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் திடீரென பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வட்டாரக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, வார்டு கவுன்சிலர் ஜெகதீசன் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பெற்றோர்கள் கூறும்போது, தலைமை ஆசிரியை அடிக்கடி பள்ளிக்கு தாமதமாக வருகிறார். மாணவர்களுக்கு முறையாக கல்வி கற்பிக்கவில்லை. தலைமையாசிரியரின் கணவர் பள்ளி உள்விவகாரத்தில் தலையிடுகிறார். எங்களையும் மிரட்டுகிறார். எனவே உடனடியாக இந்த பள்ளியில் இருந்து தலைமையாசிரியையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் எங்களது குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) கொடுத்துவிடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என்றனர். தொடர்ந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.