Skip to main content

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Published on 25/12/2021 | Edited on 25/12/2021

 

students incident govt teacher police in coimbatore

 

கோவையில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

 

கோவை மாவட்டம், வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் விஜய் ஆனந்த், 11ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, புகைப்படங்களை அனுப்பக் கோரி வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆன்லைன் வகுப்பு நடந்தபோது, மாணவிகளுக்குத் தனியாக வீடியோ காலில் அழைப்பது, டிசர்ட் அணிந்துகொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களிலும் அந்த ஆசிரியர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

 

இது தொடர்பாக மாணவிகள் தலைமையாசிரியரிடம் புகார் கூறியதாகவும், அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பிரச்சனை குறித்து பேசியதாகவும் தெரிகிறது. ஆனால் ஆசிரியர் விஜய் ஆனந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி மாணவ, மாணவியர் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதற்கிடையே, பள்ளி ஆசிரியர் விஜய் ஆனந்தை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அந்த நகலைக் காண்பித்து, ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படி மாணவர்களிடம் பள்ளி நிர்வாகிகள் கேட்ட பின்னரும், ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 

 

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.