Student who wrote neet exam has been passed away

Advertisment

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு, முத்தூரைச் சேர்ந்தவர்கள் குப்புசாமி - வளர்மதி தம்பதி. இவர்களது மகன் கீர்த்திவாசன், வயது 20. இவர் 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இதில் மூன்று முறையும் தோல்வியடைந்ததால் நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கீர்த்தி வாசன் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகக் கூறி, இந்தமுறையும் தோல்வியடைந்து விடுவேனோ என மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (29.10.2021) மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டு தனது தாயார் வளர்மதியிடம் தான் விஷம் குடித்ததாக தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட அவரது தாய், உடனடியாக வீட்டிற்கு வந்து கீர்த்திவாசனை மருத்துவ சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு செல்லும் வழியில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

தற்போது மாணவன் கீர்த்தி வாசன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவுசெய்து மாணவரின் தற்கொலைக்கு நீட் தேர்வுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்திவருகின்றனர்.