Skip to main content

நான் ஏன் படிக்க வேண்டும்? - பள்ளி மாணவரின் கேள்வியால் அதிர்ந்த அரங்கம் 

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Student mentoring program organized by Journalists Association

 

புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம், வாசகர் பேரவை இணைந்து நடத்திய மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பயனுள்ள தகவல்களைப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சியை புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மற்றும் வாசகர் பேரவை இணைந்து நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர் யோகராஜா தலைமையில் நடந்த விழாவில் பத்திரிகையாளர் சங்க செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் கவிஞர் சு. மதியழகன் வரவேற்றார். கலைஞர்கள் அறிவொளி கருப்பையா, தமிழரசன் ஆகியோர் மாணவர்களை உற்சாகமூட்ட பாடல்களைப் பாடினர்.

 

Student mentoring program organized by Journalists Association

 

நிகழ்வில் மாவட்ட மனநலத்திட்ட அலுவலர் மரு. கார்த்திக் தெய்வநாயகம் கலந்து கொண்டு பேசும்போது, “மாணவப் பருவத்தில் மன அழுத்தம் தேவையில்லை. எந்தப் பாடத்தையும் கஷ்டப்படாமல் கவனச் சிதறல் இல்லாமல் இஷ்டப்பட்டு படித்தால் எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். அதே போல இந்த மாணவப் பருவத்தில் தான் தவறான வழிக்கு திசை திருப்பும் முயற்சிகள் நடக்கும். சக நண்பர்களுடன் செல்லும் போது விளையாட்டாக போதைப் பொருளை முதலில் உட்கொள்ளச் சொல்லும் போது மனம் தடுமாறாமல் தவிர்க்க வேண்டும். முதலில் என்னதான் செய்கிறது பார்ப்போம் என்று ருசிக்கத் தொடங்கிவிட்டால் அந்த ருசி உங்களை விட்டுப் போகாமல் ஆட்கொண்டுவிடும் அதுதான் போதைக்கு அடிமையாவது என்பது. அதன் பிறகு உங்கள் புத்தி உங்களிடம் இருக்காது மனம் ஒன்று நினைக்கும் செயல் வேறாக இருக்கும். இதனால் கண்டவர்களிடமும் கெட்ட பெயர் வாங்க வேண்டிய நிலை வரும். அந்த நிலைக்கு வராமல் தடுக்க ருசி பார்ப்பதையே தவிர்க்க வேண்டும்.

 

தொடர்ந்து, ‘நான் ஏன் படிக்க வேண்டும்’ என்று ஒரு மாணவன் கேள்வி எழுப்பியதைப் பார்த்து சக மாணவர்கள் சிரித்தபோது சரியான கேள்வி என்ற மருத்துவர், “நாம் சுயமாக சிந்திக்கவும், சுயமாக செயல்படவும் கல்வி அறிவு அவசியம். நம் தாத்தா, அப்பா அறிந்து கொள்ள முடியாத பல விசயங்கள் நமக்கு தெரிகிறது. அதற்கு காரணம் கல்வி  தான்” என்றவர் பல மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் கூறினார். மேலும், “உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கவலைகளை போக்க உடனே மாவட்ட மன நலத்திட்ட அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசுங்கள்” என்றார்.

 

தொடர்ந்து வாசகர் பேரவை செயலாளர் ஓய்வுபெற்ற பேராசிரியர் விஸ்வநாதன் பேசும்போது, “பள்ளி மாணவர்கள் விருப்பப்பட்டு படிக்க வேண்டும். நீங்கள் எந்த துறையில் ஆளுமையாக வரவேண்டும் என்பதை முடிவெடுங்கள். அதற்கான படிப்புகளை படியுங்கள் வேலை, தொழில் நிச்சயம் உண்டு. எதைப் படித்தாலும் தாய்மொழியில் படிக்கும் போது கூடுதல் பலமுண்டு. தமிழ் வழியில் படித்தால் வேலை வாய்ப்பிலும் அரசு இட ஒதுக்கீடு தருகிறது. எந்த பாடப் பிரிவும் கெட்டது கிடையாது. ஆய்வுப் படிப்பிற்கான உயர் படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றால் ஊக்கத் தொகையுடன் கல்வியும் கிடைக்கிறது. படிப்பை முடித்தவுடன் வேலை வீடு தேடி வரும் என்று இல்லாமல் நம் படிப்பிற்கான வேலையை தேடிப் போனால் வேலை நிச்சயம் உண்டு” என்றார். இவரும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து புத்தங்களும் பரிசு வழங்கினார்.

 

விழா முடிவில் துர்கா மகேஷ்வரன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர். பள்ளி வளாகத்தில் மழைத் தண்ணீரால் சகதியாக இருந்ததால் மீனாட்சி மண்டப உரிமையாளர் மாணவர்களுக்கான நிகழ்ச்சிக்காக திருமண மண்டபத்தை இலவசமாக கொடுத்திருந்தார். இதேபோல மாவட்டம் முழுவதும் மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.