Skip to main content

மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவு

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

student incident cbi investigation madurai high bench order

 

பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளிக் கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

இதனிடையே, அந்தத் தனியார் பள்ளி சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், இவ்வழக்கு குறித்த விசாரணை முறையாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 53 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. எனினும், அந்த வீடியோவை எடுத்த நபர் ஆஜரான நிலையில், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆகவே, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தடய அறிவியல் துறையின் அறிக்கைக்காகவும் தாங்கள் காத்திருக்கிறோம். ஆகவே, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

 

அதைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், "இந்த வழக்கு விசாரணை தொடக்கத்திலேயே தஞ்சை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மதம் மாறச் சொன்னதாகக் கட்டாயப்படுத்தப்படவில்லை என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே, இவ்வழக்கில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆகவே, இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்" என்று வாதிட்டார். 

 

பள்ளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாணவியை அவரது சித்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தினார். மாணவிக்கான கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளைப் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. தங்கள் பள்ளி மீது அவதூறான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு அது அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது" என்ற வாதத்தை முன் வைத்தார். 

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பினைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், இன்று (31/01/2022) மாணவியின் தற்கொலை வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாத நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.