hjk

ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்துவிட்டு பள்ளி மாணவி தூக்கில் தொங்கிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்துவந்துள்ளார். இந்நிலையில், நேற்று (11.11.2021) இரவு தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவியை சாப்பிட அழைக்க அவரது அறைக்குச் சென்ற அவரது அம்மா, தனது மகள் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் அவர் பார்த்துள்ளார். அதில், பள்ளி ஆசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரைக் குறிப்பிட்டு, தனக்கு இவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்து வீட்டிற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக மாணவியின் தாய் கூறுகையில், "என் பொண்ணுக்கு ஆறு மாதமாக இந்த தொந்தரவைக் கொடுத்துவந்துள்ளார்கள். ஆனால் அதுபற்றி அவள் எங்களிடம் கூறவில்லை. பள்ளியில் இந்த ஆசிரியர் இவ்வாறு செய்வது தெரிந்தும்என் மகளிடம், இதைப் பெரிய விஷயமாக ஆக்க வேண்டாம்.பேருந்தில் முகம்தெரியாத ஆள் ஒருவர் தவறுதலாக இடித்ததைப் போல் நினைத்துக்கொள் என்று கூறியுள்ளனர். என் மகள் ஒரு தங்கம், இவர்கள் அனைவரும் சேர்ந்து என் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். எங்களிடம் முன்பே சொல்லியிருந்தால் அவளது உயிரைக் காப்பாற்றியிருப்போம்.என் செல்லத்தை இழந்துவிட்டோம்" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Advertisment