Skip to main content

ஊஞ்சல் ஆடிய மாணவன் மயங்கி விழுந்து மரணம்..!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

Student dies after fainting while swinging

 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகில் உள்ளது மணம்பூண்டி. இங்குள்ள புது நகரைச் சேர்ந்த தனராஜ் என்பவரது மகன் 13வயது யோகேஸ்வரன். இவர் திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று (15.04.2021) மதியம் அவரது வீட்டில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்.

 

அந்த நேரத்தில் ஊஞ்சல் மீது தொங்கிக்கொண்டிருந்த துணி ஒன்று எதிர்பாராதவிதமாக ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த யோகேஸ்வரன் கழுத்தில் சுற்றியுள்ளது. ஊஞ்சல் விளையாடும் ஆர்வத்தின் காரணமாக யோகேஸ்வரன் அதைக் கவனிக்கவில்லை. இதனால் நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்துள்ளார் யோகேஸ்வரன். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக யோகேஸ்வரனை திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், யோகேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுது துடித்தனர். இந்த விபத்தினால் 13 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். ஊஞ்சலில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன், அதில் இருந்த துணி அவரின் கழுத்தைச் சுற்றியுள்ளது.

 

விளையாடும் கவனத்தில் யோகேஸ்வரன் அதைக் கவனிக்காததால், அந்த துணி அவரது கழுத்தை இறுக்கி உயிரைப் போக்கியுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது கூட, அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றும், அவ்வப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கத் தவறினால் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.