Skip to main content

போராட்டம் தொடரும்; பேச்சுவார்த்தைக்கு பின் ஒப்பந்த செவிலியர்கள் அறிவிப்பு

Published on 07/01/2023 | Edited on 08/01/2023

 

The struggle will continue; Notification of contract nurses after negotiation

 

கொரோனா ஊரடங்கு காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்கள் பணிநீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சேலத்தில் இப்போராட்டம் மூன்று தினங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. பிறகு இப்போராட்டத்தில் பங்கேற்ற சிலர் சென்னைக்கு சென்று தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

 

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். திடீரென்று பெருகிய கொரோனா நோயாளிகள் ஒருபுறம் இருக்க, ஏற்கனவே பணியாற்றி வரும் அரசு செவிலியர்கள், மருத்துவர்கள் பலரும் கொரோனாவில் சிக்கி விடுப்பில் சென்றனர்.

 

இதையடுத்து, அப்போதிருந்த அதிமுக அரசு தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக ஃபேஸ் 1, ஃபேஸ் 2 என இரண்டு கட்டங்களாக 3200 செவிலியர்களை அவசர அவசரமாக நியமித்தது. இவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியில் பணிநீட்டிப்பு உத்தரவு பெற்ற இவர்கள், இரண்டரை ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியுடன் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த தற்காலிக செவிலியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜனவரி 1 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாயன்று (ஜன. 30) கண்களில் கருப்புப்பட்டை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், ராமநாதபுரம், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

The struggle will continue; Notification of contract nurses after negotiation
முத்துலட்சுமி

 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட செவிலியர்கள் தரப்பில் தஸ் நேவிஸ், முத்துலட்சுமி, பாலசந்திரன், வில்வ வினிதா ஆகியோரிடம் பேசினோம். “கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, முந்தைய அதிமுக ஆட்சியின்போது 2020 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டு கட்டங்களாக சுமார் 3200 செவிலியர்களை தற்காலிகமாக நியமித்தனர்.

 

மாதம் 14 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கி வந்தனர். எம்.ஆர்.பி. போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, இனசுழற்சி அடிப்படையில் நியமிக்கப்பட்டோம். ஆனால், திமுக ஆட்சி அமைந்த பிறகு, கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களில் 800 பேர் இனசுழற்சி அடிப்படையில் நியமிக்கப்படவில்லை எனக்கூறி, அவர்களை பணியில் இருந்து நீக்கி விட்டது. இனசுழற்சி, இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் நியமித்தது அரசின் தவறு. அதில் இரண்டு அரசுகளும் எங்களை ஏன் பலிகடாவாக்க வேண்டும்? மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட 800 பேரை தவிர, மற்ற 2472 பேரும் முறையான இனசுழற்சி, தகுதி அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். இதை, இப்போதுள்ள அரசு சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்களுக்கு வழங்கிய பணி நியமன ஆணையிலேயே இனசுழற்சி, தேர்வு அடிப்படையில் நியமனம் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.

 

The struggle will continue; Notification of contract nurses after negotiation
நேவிஸ்

 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் திடீரென்று டிசம்பர் 30 ஆம் தேதியுடன் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட 2472 தற்காலிக செவிலியர்களையும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அடுத்து நாங்கள் எங்கே போவது என்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் தவித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரவில்லை. அதேநேரம், எங்களுக்கு பணிநீட்டிப்பு வழங்க வேண்டும். மேலும், கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை தொகுப்பு ஊதியத்திற்கு மாற்ற வேண்டும். காலிப்பணியிடங்கள் உருவாகும்போது, எங்களுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிரந்தரம் செய்ய வேண்டும்”  என்றார்கள் பாதிக்கப்பட்ட செவிலியர்கள்.

 

செவிலியர் படிப்பை முடித்துவிட்டு பலர் முன்னணி தனியார் மருத்துவமனைகளிலும், சிலர் வேறு துறைகளிலும் மாதம் 40 - 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம் பெற்று வந்துள்ளனர். என்றாவது ஒருநாள் அரசுப்பணி நிரந்தரமாகி விடும் என்ற கனவில் பலர் தாங்கள் வாங்கி வந்த நல்ல ஊதியத்தை விட்டுவிட்டு, 14000 ரூபாய் தொகுப்பூதியத்திற்கு தற்காலிக பணியில் சேர்ந்துள்ளதும் நமது விசாரணையில் தெரியவந்தது.

 

The struggle will continue; Notification of contract nurses after negotiation
வில்வ வினிதா

 

இது ஒருபுறம் இருக்க, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 200 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்கிறார்கள். இங்கு மட்டுமின்றி, மேட்டூர் (சேலம்), தஞ்சாவூர், கரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் 2 மாதம் முதல் 6 மாதம் வரை ஊதியம் கொடுக்கப்படாமல் இழுத்தடித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

 

இது தொடர்பாக விளக்கம் பெற நாம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை கடந்த மூன்றாம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய அவரது பி.ஏ., “அமைச்சர் வெளியூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருக்கிறார். இப்போதைக்கு அவரிடம் பேச முடியாது. இந்த பிரச்சனை தொடர்பாக அமைச்சர் ஏற்கனவே ஊடகங்களிடம் விளக்கம் கொடுத்து விட்டார். இது தொடர்பாக செவிலியர்கள் தரப்பு பிரதிநிதிகளை அமைச்சரிடம் நேரில் பேசச்சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

 

The struggle will continue; Notification of contract nurses after negotiation
பாலச்சந்திரன்

 

இது ஒருபுறம் இருக்க, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் ஆதரவு கேட்டு, திங்களன்று (ஜன. 2) சேலத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். பாஜக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், இடதுசாரிகள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

 

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ஒப்பந்த செவிலியர்கள் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணி நீட்டிப்பு செய்வது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணி நீட்டிக்கும் முடிவை ஒப்பந்த செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடரும் என ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.