Skip to main content

இன்றிலிருந்து போராட்டம்; நாளையிலிருந்து தட்டுப்பாடு - ஆவினுக்கு புதிய சிக்கல்

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Struggle from today; Scarcity from tomorrow; A new problem for Awain

 

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நேற்று பால்வளத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 7 வரை உயர்த்தி வழங்கக்கோரி கோரிக்கை வைத்திருந்தனர். பசும்பாலுக்கான கொள்முதல் விலையை ரூ. 35 இல் இருந்து ரூ. 42 ஆகவும், எருமைப்பாலுக்கான கொள்முதல் விலையை ரூ. 51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை நேற்று தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கால்நடை விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பால் விநியோகம் செய்யப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அரசு அழைத்து தீர்வு காணும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

கால்நடை விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவன மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 27 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 14.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை ஆகும் நிலையில், ஆவின் நிறுவனத்திற்கு 9 ஆயிரத்து 300 கூட்டுறவு பால் சங்கங்கள் மூலம் பால் விநியோகிக்கப்படுகிறது. 9,300 சங்கங்களும் 3 வகையான சங்கங்களாகப் பிரிந்துள்ள நிலையில், மூன்றில் ஒரு சங்கம் தனது பால் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் லிட்டர் வரை பால் விநியோகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. 

 

தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு கூடுதலாக 10 ரூபாய் வரை வழங்கத் தயாராக உள்ள நிலையில், அரசும் தனியாருக்கு நிகராக விலையை ஏற்றிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி பால் உற்பத்தியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. போராட்டம் இன்றிலிருந்து துவங்கியுள்ளதால் நாளையிலிருந்து தான் இதன் தாக்கம் உணரப்படும் எனத் தெரிகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

ஆவின் மாதாந்திர பால் அட்டையில் மாற்றம்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
A change in the monthly milk card

ஆவின் மாதாந்திர பால் அட்டையை எளிய நடைமுறையில் காகிதமில்லா முறையில் அறிமுகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது. பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தற்போது காகிதமில்லா பால் www.aavin.tn.gov.in இணையதளத்தின் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாகவும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்பொழுது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தியைக் கொண்டு நுகர்வோர்கள் ஆவின் பால் டெப்போக்களில் காண்பித்து பால் வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காகித பால் அட்டையையும் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முனிசிபல் சாலை, அந்தோனியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஹவுசிங் போர்டு காலனி, பெரிசன் காம்ப்ளக்ஸ் சாலை, டீச்சர்ஸ் காலனி, 3வது மைல் பாலம் அருகில், தமிழ்ச் சாலை, 3வது மைல் பாலகம், ஸ்டேட் பாங்க் காலனி, கோபாலராயபுரம், சாயர்புரம், கருங்குளம் உள்ளிட்ட 13 பகுதிகளில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி ஆவின் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.