Skip to main content

“விவசாயிகள் வாழ்வில் வெந்நீரைப் பாய்ச்சும் பா.ஜ.க - அ.தி.மு.க. அரசுகள்!” -மு.க.ஸ்டாலின் காட்டம்!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

mkstalin

 

செப்டம்பர் 28-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தி.மு.க தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

 

நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை உள்ளது என்ற அரிய நிலைமையைப் பயன்படுத்தி, மக்கள் நலனிலும் அவர்தம் நல்வாழ்விலும் அக்கறை செலுத்தாமல்; ஊரடங்கு காலத்தில், ஏழை - எளிய தொழிலாளர்களை வேலையின்றி - பட்டினியால் வாடச் செய்து, ஊர் ஊராக அலையவைத்து, நூற்றுக் கணக்கானவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது விவசாயிகளின் வாழ்க்கையுடன் விபரீத விளையாட்டு நடத்தும் வினோதமான மசோதாக்களை நிறைவேற்றிச் சட்டமாக்கியுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளைப் புறந்தள்ளி; மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாக்கள் நிறைவேற்றம் குறித்து முறையான வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தியபோதும்; அதனைப் பரிசீலிக்காமல் நிராகரித்து, குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக, அவையின் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது, அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

நாட்டைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த மொழிபேசும் மக்களைப் பாதிப்பதாக இருந்தாலும், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகக் குரல் கொடுக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற வரலாறு இப்போதும் தொடர்வதைப் பொதுமக்கள் அறிவர். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயப் பெருமக்களை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து அவர்களை அடிமைப்படுத்தும் மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் மசோதாக்கள், சட்டமாவதையும் நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளிலும் கடுமையாக எதிர்த்தது தி.மு.கழகம். தோழமைக் கட்சியின் உறுப்பினர்களும் உறுதியுடன் எதிர்த்தனர்.

 

விவசாயப் பெருமக்களைப் பாதுகாத்திட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும், ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்கவும், கூட்டணிக்  கட்சியினர் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 21) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

 

தி.மு.கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தும் உங்களில் ஒருவனான நான் தலைமையேற்க, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி ஆகிய முன்னோடிகளுடன் தோழமைக் கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்கள், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் திரு. கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள், திராவிடர் கழகப் பொருளாளர் திரு. வீ.குமரேசன் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னாள் எம்.பி திரு. அப்துல்ரகுமான் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் திரு. எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திரு. ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் திரு. ரவி பச்சமுத்து அவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயிகள் நலன் காக்க ஆலோசனை நடத்தப்பட்டது.

 

வேளாண்மை சம்பந்தப்பட்ட மூன்று மசோதாக்களை, கரோனா பேரிடர் காலத்திலும் அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல், அவசர அவசரமாக நிறைவேற்றிச் சட்டமாக்கியுள்ள மத்திய பா.ஜ.க. அரசும், அதன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும், இந்தச் சட்டங்களால் விவசாயப் பெருமக்களுக்கு நன்மை விளையும் என்றும், அவர்களின் வாழ்க்கை நிலை பாதுகாக்கப்பட்டுப் பன்மடங்கு உயரும் என்றும் விளக்கம் அளிப்பதுடன், அரசு செலவில் - மக்கள் வரிப்பணத்தில் பத்திரிகைகளுக்குப் பக்கம் பக்கமாக விளம்பரங்களையும் அளிக்கிறார்கள். ஊடகங்களில் விளம்பரம் செய்தால் பொய்யை உண்மையாக்கிவிடலாம் என மத்திய பா.ஜ.க. அரசு நம்புகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, கரோனா ஊரடங்கு கால அறிவிப்புகள் இவையனைத்திலும் பிரதமரும் மத்திய பா.ஜ.க அமைச்சர்களும் அளித்த வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளோ பொதுமக்களோ இனியும் ஏமாறத் தயாராக இல்லை.   

 

புதிய வேளாண் சட்டங்களின் வாயிலாக, விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு ஆகும் என்று சொல்லியிருக்கிறார் பிரதமர் திரு. மோடி அவர்கள். ஆனால், இந்தச் சட்டங்களினால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் இழக்கப் போகிறார்கள் இந்திய விவசாயிகள் என்பதே உண்மையான, ஆனால் கசப்பான நிலவரம். திரு. மோடி அவர்கள் தலைமையிலான பா.ஜ.க அரசு செய்துள்ள விளம்பரத்தில் தேன் தடவித் தரப்பட்டிருக்கும் நஞ்சும், வேளாண் சட்டத்தின் உண்மையான பாதிப்பும் பின்வருமாறு அமைந்துள்ளன.

 

விளம்பரம்: வேளாண் மசோதா குறைந்தபட்ச ஆதார விலையை எதுவும் செய்யவில்லை.

 

உண்மை: குறைந்தபட்ச ஆதார விலை உண்டு என்று குறிப்பிட்டு எந்தப் பிரிவும் வேளாண் சட்டத்தில் இல்லை. குறிப்பாக “MSP” (Minimum Support Price) என்ற சொற்றொடரே அச்சட்டத்தில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை.               

 

விளம்பரம்: மண்டி முறை உள்ளபடியே தொடரும்.

 

உண்மை: ஆன்லைன் வர்த்தகத்தால் முதலில் பலியாவது மண்டிகளும், வேளாண் விளைபொருட்கள் விற்பனை ஒழுங்குமுறை கூடங்களும், உழவர் சந்தைகளும்தான்.

 

விளம்பரம்: வேளாண் மசோதா விவசாயிக்குச் சுதந்திரம் வழங்குகிறது.

 

உண்மை: அதிக விலை கிடைக்கும் சந்தையில், தங்களின் விளைபொருட்களை விற்கும் சுதந்திரத்தை விவசாயிகளிடமிருந்து பறிக்கிறது. பண்ணை ஒப்பந்தம் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளை அடிமைகளாக்குகிறது. அடிமைகளுக்கு ஏது சுதந்திரம்?

 

விளம்பரம்: ஒப்பந்தமானது விவசாயிகள் முன்-நிர்ணய விலையைப் பெறுவதற்கு ஏதுவாகும்.

 

உண்மை: இது பொய். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் மூலம் பதுக்கல் ஊக்குவிக்கப்பட்டு - எவ்வளவு வேண்டுமானாலும் விளை பொருட்களை கார்ப்பரேட் கம்பெனிகள் பதுக்கி வைத்துக் கொள்ளலாம் என்று “தாராளமயம்” செய்யப்பட்டு விட்டது. ஆகவே அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து- பதுக்கி வைத்து - கார்ப்பரேட் கம்பெனிகள் அதிக விலைக்கு விற்று, கொள்ளை லாபம் பெற  அனுமதிக்கிறது.

 

விளம்பரம்: விவசாயி எந்த நிலையிலும் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறும் சுதந்திரமானவராக இருப்பார்.

 

உண்மை: கார்ப்பரேட் கம்பெனிக்கும் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறும் உரிமை இருக்கிறது. ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போக முடியாது.

 

விளம்பரம்: சிறுவிவசாயிகள் பெரும் பலன் பெறுவர். மேலும் அவர்கள் நிச்சய லாபங்களுடன் தொழில்நுட்பம் மற்றும் உபகரணத்தின் பயன்களையும் பெறுவர்.

 

உண்மை: இது பச்சைப் பொய். ஆன்லைன் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே பயன் பெறும். சிறு விவசாயிகள் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவார்கள். தொழில்நுட்பம் “கார்ப்பரேட் கம்பெனிக்கு”த்தான் பயன்! கழனிகளில் சேற்றில் இறங்கி, ஏர் ஓட்டி, வியர்வை சிந்த உழைத்துக் கொண்டிருக்கும் சிறு விவசாயிக்கு எப்படிப் பயனளிக்கும்? ஆகவே முழுக்க முழுக்க இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளைக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக்கி - விவசாயம் மட்டுமே தெரிந்த 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாமர விவசாயப் பெருமக்களை வேதனையில் ஆழ்த்தி அவர்களை ஒழித்துக் கட்டும் சட்டம்.

 

Ad

 

பா.ஜ.க. அரசின் பயனேதுமற்ற இத்தகைய சட்டத்துக்கு நேர் எதிராக, விவசாயிகளின் நலன் காக்கத் தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டு, அதன் வாயிலாக உணவு தானியங்கள் அரசாங்கத்தால் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தது. உழவர்கள் தங்கள் நிலங்களில் பயிரிட்டு வளர்த்த காய்கறிகள் - கீரைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு உழவர் சந்தைகளைத் தி.மு.கழக அரசு உருவாக்கியது.

 

விவசாயிகளின் நலன் காக்கும் செயல்பாடுகளில் மாநில அரசாங்கமே முன்னிற்க முடியும் என்பதைத் தமிழகம் நிரூபித்து, பொதுவிநியோகத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்தி, நியாயவிலைக்கடை வழியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிட முடியும் எனக் காட்டி வருகிறது. தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியின்போது பொதுவிநியோகத் துறையை எப்படிச் செயல்படுத்த வேண்டும் எனத் தமிழகத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் எனப் பிறமாநில அரசுகளுக்கு, ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

 

மத்திய பா.ஜ.க. அரசின் எந்த ஒரு சட்டமும் மாநில உரிமைகளைப் பறிப்பதுபோல வேளாண்மைச் சட்டங்களும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்றன. அதனால், எதிர்க்கட்சியான தி.மு.கழகம் இதனை முழுமையாக எதிர்க்கிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொண்டு மிச்சக்காலத்தை ஓட்டுவதற்காக விவசாயிகளுக்குத் துரோகம் செய்து, மசோதாக்களை ஆதரித்து வாக்களித்து அவை சட்டமாகத் துணை நின்றுள்ளது. வேளாண் மசோதாக்களால் ஆபத்து என்பதை அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் திரு. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் அவர்களே தன் உணர்வை மறைக்க முடியாமல் வெளிப்படுத்தியிருப்பதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். 

 

தற்சார்புக் கொள்கை என்று வானவில் போல வண்ணவண்ணமாக வார்த்தைஜாலம் காட்டிக்கொண்டு, தன்மானத்துடன் வாழும் இந்திய விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றியிருக்கும் பா.ஜ.க அரசையும் அதற்குத் துணை போன - ‘விவசாயி வேடம்’ போடும் அடிமை அ.தி.மு.க. அரசையும் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சியினரும் விவசாய அமைப்பினருடன் இணைந்து நின்று, செப்டம்பர் 28-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சி மற்றும் ஒன்றியங்களில் கொரோனா கால விதிமுறைகளையும் - பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைப்பிடித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்ப வேண்டிய முழக்கங்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றைத் துண்டறிக்கைகளாக அச்சிட்டு, விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் வழங்கி, விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்தில் தள்ளும் பா.ஜ.க. - அ.தி.மு.க. அரசின் துரோகங்களை அம்பலப்படுத்துங்கள்!           

 

திரும்பப் பெறு… திரும்பப் பெறு...

பா.ஜ.க. அரசே… மோடி அரசே...

விவசாயிகளை வஞ்சிக்கும்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு!

 

ஓயமாட்டோம்… ஓயமாட்டோம்...

விவசாயிகள் நலன் காக்கும்வரை

ஓயமாட்டோம்.. ஓயமாட்டோம்..

 

வீழ்வது நாமாக இருப்பினும்;

வாழ்வது விவசாயிகளாக இருக்கட்டும்!

 

எதிரானது… எதிரானது...

பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டம்

விவசாயிகளுக்கு எதிரானது; விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிரானது!

 

எதிரானது… எதிரானது...

பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டம்

மாநில உரிமைகளுக்கு எதிரானது;

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது!

 

அனுமதியோம்... அனுமதியோம்...

கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்திடும்

பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டத்தை

அனுமதியோம் அனுமதியோம்...

 

Nakkheeran

 

பதுக்கலுக்குப் பாதை வகுக்கும்

மோடி அரசின் சட்டத்தை

அனுமதியோம் அனுமதியோம்!

 

எதிர்த்திடுவோம்… எதிர்த்திடுவோம்...

நுகர்வோருக்கு எதிரான

வேளாண் சட்டத்தை எதிர்த்திடுவோம்!

ஏழை - நடுத்தர வர்க்கத்தின்

உணவுப் பாதுகாப்பை நாசமாக்கிடும்

வேளாண் சட்டத்தை எதிர்த்திடுவோம்.

 

ஏழை மகன் என்று சொல்லியே,

ஏழைகளை வஞ்சிப்பதா?

விவசாயி வேடதாரி எடப்பாடி

விவசாயிகளை ஏமாற்றுவதா?

 

தோலுரிப்போம்... தோலுரிப்போம்...

பா.ஜ.க. - அ.தி.மு.க.

கூட்டு மோசடியைத்

தோலுரிப்போம்!

 

ஆர்ப்பரிப்போம்… ஆர்ப்பரிப்போம்...

விவசாய நாடாம் இந்தியாவை

கார்ப்பரேட் கையில் கொடுப்பதை எதிர்த்து

ஆர்ப்பரிப்போம்.. ஆர்ப்பரிப்போம்..

 

வாருங்கள்... விவசாயிகளே வாருங்கள்…

உங்களுக்கான ஆர்ப்பாட்டத்திற்கு

வாருங்கள்!

வாருங்கள் மக்களே வாருங்கள்...

நம் மண்ணைக் காக்க வாருங்கள்!

 

-  என்கிற முழக்கங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக எட்டுத் திசையும் அதிரட்டும்.

 

செப்டம்பர் 28 நடைபெறுகிற ஆர்ப்பாட்டம், விவசாயிகளின் பங்கேற்புடன் - பொதுமக்களின் ஆதரவுடன் மத்திய - மாநில அரசுகளின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தட்டும்!

 

இந்தியாவின் தென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வுத் தீ, நாடு முழுவதும் பரவட்டும்! நன்மை தராத சட்டங்களைப் பொசுக்கட்டும்! உலகத்தார்க்கு ஆணியாம் உழவர்களைப் போற்றட்டும்! விவசாயிகளின் வாழ்வு மலர்ந்து மணம் பெறட்டும்! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.