Skip to main content

துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா ராணுவ வீரர்? உடலை வாங்க மறுத்துப் போராட்டம்!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

Struggle to refuse to buy the body!

 

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகில் உள்ள ஆயாள்பட்டிக் கிராமத்தின் முல்லைராஜ் (29) கடந்த 9 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். திருமணமாகாதவர். தற்போது காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தின் நவுகாம் என்ற பகுதியில் பணியிலிருக்கிறார். இந்நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் முல்லைராஜ் இறந்துவிட்டதாக ராணுவத்திலிருந்து ஒருவர் ஆயாள்பட்டியிலிருக்கும் அவரது தாயார் அழகம்மாளுக்கு போன் செய்திருக்கிறார். 

 

பதறிப்போனவர்கள், அந்த அலைபேசி எண்ணில் மீண்டும் தொடர்பு கொண்டதில் பதிலில்லை. சோகத்திலிருந்த ஊரார் தாய் அழகம்மாளுடன் திரண்டு வந்து சங்கரன்கோவிலில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கலெக்டர் அருண்சுந்தர் தயாளனிடம் புகார் தெரிவித்தனர். அவரின் காலில் விழுந்து கதறினார் தாய் அழகம்மாள். கலெக்டரும் நடவடிக்கை மேற்கொள்வதாக ஆறுதல் படுத்தினார். இதனை ஏற்கனவே நக்கீரன் இணைய தளம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வைகோ, மத்திய ராணுவ அமைச்சரைத் தொடர்பு கொண்டு முல்லைராஜின் மரணம் குறித்து முறையான தகவல் தெரிவித்து அவரது இறப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பிறகே கடந்த 12ம் தேதியன்று முல்லைராஜ் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. பின்னர் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது.

 

இந்நிலையில் ஆயாள்பட்டிச் சுற்றுப்பட்டுக் கிராம மக்கள் திரண்டு வந்து முல்லைராஜின் மரணத்திற்கான முறையான அறிக்கையின்றி உடலை வாங்கமாட்டோம் என்று ம.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஸ்பாட்டுக்கு வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி., பாலசுந்தரம், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாயிருந்தனர். அதையடுத்து முல்லைராஜின் உடலுடன் வந்த ராணுவ அதிகாரிகளான என்.சி.சி. இளநிலை அதிகாரி ராஜீவ், முல்லைராஜ் உடன் பணியாற்றும் ராணுவ அதிகாரி சக்திவேல் உள்ளிட்டோர் அவர்களிடம் காஷ்மீர் மாநிலம் பாதுகாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் தகவல் தர தாமதமானது. அவரின் குடும்பத்தாருக்கு உரிய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து உடலைப் பெற்றனர். மக்களின் அஞ்சலிக்குப் பின்பு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

திருமணமாகாத முல்லைராஜன் மனவருத்தத்திலிருந்ததாகவும் அதையடுத்தே திடீரென தன்னுடைய ஏ.கே.47 துப்பாக்கியால் முன்று முறை தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்களும் பரவுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

சாதுரியமாகச் செயல்பட்ட முதிய தம்பதியினர்; வீட்டிற்குச் சென்று பாராட்டிய ரயில்வே அதிகாரி!

Published on 01/03/2024 | Edited on 02/03/2024
An elderly couple who acted astutely Railway officer who went home and appreciated

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி (25.02.2024) நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் என்ற தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்துகொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து உடனடியாகத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி (27.2.2024) தலைமைச் செயலகத்தில் சண்முகையா - வடக்குத்தியாள் அத்தம்பதியரின் வீரதீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வெகுமதியாக வழங்கி பாராட்டினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!. எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

An elderly couple who acted astutely Railway officer who went home and appreciated

இந்நிலையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா இந்த ரயில் விபத்தை தவிர்த்த செங்கோட்டையைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியரை புளியரையிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். அதனைத் தொடர்ந்து பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்த பாராட்டு விழாவில் இத்தம்பதியருக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கி சரத் ஸ்ரீவத்சவா கவுரவித்தார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட ரயில்வே முதுநிலை பொறியாளர் எம். பிரவீனா, கோட்ட ஊழியர்கள் நல அதிகாரி டி. சங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.