/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_169.jpg)
சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கும் இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம், மாநில பொது செயலாளர் ஜெயச்சந்திர ராஜா, மாநில துணைத் தலைவர் துரை சேகர், நகர நிர்வாகிகள் கண்ணன், நரசிம்மன், கனகசபை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வட்டாட்சியரிடம் இயந்திரத்தை ஒப்படைத்தனர். அவர் பெற்றுக் கொள்ள மறுத்ததால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதுகுறித்து சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், “பயோமெட்ரிக் முறையில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதில் காலதாமதம் மற்றும் சிரமம் ஏற்படுகிறது. பொங்கலுக்கு தேவையான பொருட்களை வழங்கிவிட்டு அதன் பிறகு தொழில்நுட்ப கோளாறை சரி செய்தபின்னர் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு பிரச்சனை உள்ளது போல் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. நியாய விலை கடையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உள்ளது. இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
Follow Us