திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அழகம்பட்டி, கொடைரோடு, அம்மாபட்டி, சிலுக்குவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விருதுநகரில் இருந்து திருப்பூர் வரையியே உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக சிறு குறு விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி அதில் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியினை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மின் கோபுரம் அமைப்பதற்கு நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பகுதியில் பூக்கள் அதிகமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
50 சென்ட் முதல் ஒரு ஏக்கர் அளவிலான நிலங்களிலே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களிடம் அடித்து பிடுங்குவது போல் நிலங்களை பிடுங்கி உயர்மின் கோபுரம் அமைப்பதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சில்குவார்பட்டி அருகே மின் கோபுரம் அமைக்கும் விளைநிலத்தில் நிலக்கோட்டை தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அ.தி.மு.க, பி.ஜே.பி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.