Advertisment

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்திட வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளின் தலித் விரோத போக்கை கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த வலியுறுத்தியும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது.

இதில் பேசிய திருமாவளவன், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். உச்சநீதிமன்றம் வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மத்திய அரசு இதற்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி கல்வி ஊக்க தொகையை மத்திய அரசு தான் வழங்கி வருகிறது, ஆனால் சட்டசபையில் ஓ.பி.எஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். இது உண்மைக்கு புறம்பானது என தெரிவித்தார்.

மேலும் காவிரி விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர்கள் கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள் எனவும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத பட்சத்தில், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.