ram-rajya-rath-yatra

தமிழகத்திற்கு இன்று வரவுள்ள விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஐந்து நாட்களுக்கு நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து 6 மாநிலங்களைக் கடந்து ராமேஸ்வரம் வரை ராமராஜ்ய ரதயாத்திரை நடைபெறுகிறது. கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு பகுதிகளின் வழியாக இன்று தமிழக எல்லைக்குள் வருகிறது. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே, ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்க இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

Advertisment

இதற்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழகத்திற்கு வருகைதரும் ரதயாத்திரையை மறிக்கப் போவதாக சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அறிவித்துள்ளன. இதையடுத்து, செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, ரதயாத்திரையை எதிர்த்து போராட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதேபோல், ரதயாத்திரையை எதிர்த்து போராட்டத்திற்கு செல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பெரியார் திராவிடர் கழக நிறுவனர் ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.