
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாமக சார்பாக இன்று சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பாமகவின் மகளிர் அணி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என பாமக தலைமை தகவல் வெளியிட்டுள்ளது.