Strengthened Low Pressure Area Chance of heavy rain

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு - வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நகர்ந்து நாளை (30.11.2023) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

Advertisment

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். அதற்கு மியான்மர் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 'மிக்ஜாம்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (29.11.2023) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.