
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தையை தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் தலையில் பலத்த காயத்துடன் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அண்மையாகவே தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் ஆட்டோ ஓட்டுநரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 3 வயது ஆண் குழந்தை தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது தெரு நாய் ஒன்று கொடூரமாக கடித்துக் குதறியது. இதில் முகம், தலை, கை, கால் என பல இடங்களில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைக்கு பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தையல்கள் போடப்பட்டுள்ளது.