Skip to main content

கடித்து குதறிய தெரு நாய்; கதறி அழுத 3 வயது சிறுவன் - பதைபதைக்கும் காட்சி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
 stray dog bit a three-year-old boy in Kerala
கோப்புப்படம்

சென்னை, ராயபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஜி.ஏ.சாலையில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இவ்வாறு 28 பேரை அந்த நாய் கடித்து குதறியுள்ளது. இதில், முதியவர்கள் சிலர் இந்த நாய் துரத்தும் போது, அதனிடமிருந்து தப்பிக்க ஓடியதில் தவறி விழுந்து காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நாயை அப்பகுதி மக்கள் அடித்தே கொன்றனர். 

இதனையடுத்து, அந்த நாய்க்கு வெறி பிடித்திருக்க வாய்ப்பிருக்கு என்பதால், அதன் உடலைக் கைப்பற்றி, மாதிரிகளைச் சேகரித்து, உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தனர். அப்போது, 28 நபர்களை கடித்த அந்த நாய், வெறி நாய்தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு ரேபிஸ் எனப்படும் வெறி நாய்க்கடிக்கான சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இதே போல, வேலூர் பகுதியிலும் தெரு நாய்களின் அட்டூழியம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், காரைக்குடியிலும் சாலையில் நடந்து சென்ற 7 பேரை ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாட்டில் நிலைமை இப்படி இருக்க, கேரளாவிலும் தெரு நாய்கள் அட்டூழியம் அதிகரிக்க துவங்கியுள்ளது. கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ளது பெரிங்காடு கிராமம். இந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி காலை 11 மணியளவில், இந்தப் பகுதியைச் சேர்ந்த கெளதம் கிருஷ்ணா என்ற மூன்று வயது சிறுவன் தனது வீட்டின் எதிரே விளையாண்டுள்ளார். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று, யாரும் வெளியில் இல்லாத நேரம் பார்த்து சிறுவன் மீது பாய்ந்து கண்டபடி கடித்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத சிறுவன் கீழே விழுந்து கதறி அலறியுள்ளார். ஆனாலும், அவனை விடாத அந்தத் தெரு நாய் மறுபடியும் கீழே விழுந்த சிறுவனின் தலையில் கடித்துள்ளது. அப்போது வலி தாங்கமுடியாமல் சிறுவன் வேகமாக அலறியுள்ளார். 

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்த தாய் வெளியே ஒடி வந்துள்ளார். அப்போது, தனது மகனை தெரு நாய் கடித்துக்கொண்டிருப்பதைக் கண்டதும், ஆத்திரமடைந்த தாய், அந்த நாயை விரட்டிச்சென்றுள்ளார். இதற்கிடையில், சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும், கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு தெரு நாயை அடித்து விரட்டியுள்ளனர். 

அதன் பின்னர், அவர்கள் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர். அதில், அமைதியாக விளையாண்டுகொண்டிருந்த சிறுவனை, யாருமில்லாத சமயம் பார்த்து அந்த நாய் கடிப்பதும், பின்னர், கீழே விழுந்து சிறுவன் அலறும் போது மறுபடியும் அந்த நாய் வெறியோடு கடிப்பதும், அதன் பின்னர் சிறுவனின் அம்மா ஓடி வருவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தெரு நாய்கள் குறித்து விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த சிசிடிவி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பார்த்த நெட்டிசன்கள், தெரு நாய்கள் குறித்த தொல்லைகளுக்கு தீர்வு காண்பது அவசியம் எனவும், யாரும் வளர்க்காத நாய்களைக் கண்டறிந்து நகராட்சி ஊழியர்கள்தான் அவைகளுக்கு கருத்தடையோ அல்லது வேறு ஏதேனும் மாற்று வழிகளையோ செய்ய வேண்டும் எனவும் கூறுகின்றனர். மேலும், இந்தத் தெரு நாய்களில், ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நாய்களைக் கண்டறிந்து, முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவில் வீட்டின் எதிரே விளையாண்ட 3 வயது சிறுவனை தெரு நாய் கொடூரமாக கடித்துக்குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.