Skip to main content

புயல் அடிச்சு ஒரு வருசமாச்சு... மின்சாரமின்றி இருளில் தவிக்கும் கிராமம்;அலட்சியத்தில் அதிகாரிகள்!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி அதிகாலை கடுமையாக தாக்கிய கஜா புயலில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் நிலைகுலைந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளை காணவில்லை. தென்னை, மா, பலா, வாழை, தேக்கு என கோடிக்கணக்காண மரங்களும் சாய்ந்தது. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் ஒடிந்து சாய்ந்தது. பலர் உயிரிழந்தார்கள்.

ஒரு நாள் அந்த துயரத்தில் இருந்தார்கள் அடுத்த நாள் அரசாங்கம், அதிகாரிகள் வரவில்லை. அந்தந்த கிராம இளைஞர்களே களமிறங்கினார்கள். தங்கள் கிராமத்தை தாங்களே சீரமைத்தனர். மரங்களை வெட்டி அகற்றி பாதைகளை அமைத்தார்கள். ஊருக்கு ஊர் சோறு சமைத்து கொடுத்தார்கள். குடிக்க தண்ணீருக்காக ஜெனரேட்டர் வசதி செய்தனர். டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார்கள். தன்னார்வலர்களும் கை கொடுத்தார்கள். அரசு சில மாதங்களுக்கு பிறகு நிவாரணப் பொருள் கொடுத்தது. அதிலும் பாதிப்பேருக்கு இல்லை.

 

 The storm hit the village for a year ... The authorities of indifference!


இருண்டு கிடந்த கிராமங்களை இருளில் இருந்து மீட்க இளைஞர்களும், கிராமத்தினரும் தங்கள் சொந்த செலவில் மின் கம்பங்களை எடுத்துச் சென்றனா். பொக்கலின் உதவியுடன் தூக்கி நட்டனர். மின்கம்பிகளை மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் துணையோடு இளைஞர்களே இழுத்துக் கட்டினார்கள். இப்படியே சில மாதங்களுக்கு பிறகே மின்சாரம் கிராமங்களுக்கள் வந்து சேர்ந்தது. இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை மக்கள். ஒரு வருடம் உருண்டுவிட்டது. ஆனால் ஒரு கிராமத்தில் இன்னும் மின்சாரம் இல்லாமல் பல வீடுகள் இருளில் தவிக்கிறது என்பது தான் வேதனையிலும் வேதனை.
 

 The storm hit the village for a year ... The authorities of indifference!

 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ளது ஒக்கநாடு மேலையூர் கிராமம். இந்த கிராமத்திலும் புயல் பாதிப்புகள் அதிகமாக இருந்தது. மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் ஒடிந்தது. உடனே கிராமத்தினரும், இளைஞா்களும் அவற்றை அகற்றினார்கள். மின் கம்பங்களையும் சொந்த செலவில் கொண்டு வந்தார்கள். ஆனால் மின் இணைப்புகள் கொடுக்கவில்லை. பல நாள் போராட்டத்திற்கு பிறகு கிராமத்திற்கு மின் இணைப்புகள் கிடைத்தது. ஆனால் யாதவர் தெருவில் உள்ள பல வீடுகளுக்கு தான் இன்னும் மின் இணைப்பு இல்லை.

எத்தனையோ போராட்டங்கள் எதற்கும் அசையவில்லை அதிகாரிகள். 18 ந் தேதி மின்சாரம் கொடுக்க வந்த அதிகாரிகள் பாதியில் திரும்பி போனார்கள். அதனால் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற கிராம மக்கள். எங்கள் வீடுகளுக்கு மின்சாரம் வரும் வரை வட்டாட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்கிறோம் என்று அமர்ந்து விட்டனர். அதன் பிறகு ஓடி வந்த ஒரு சில அதிகாரிகள் விரைவில் மின்சாரம் கொடுக்கிறோம் என்று சொன்னதோடு சரி. அங்கிருந்து மக்கள் சென்றதும் பழைய பல்லவியை பாடத் தொடங்கிவிட்டனர்.

 

 The storm hit the village for a year ... The authorities of indifference!

 

ஏன் இந்த தெருவுக்கு மட்டும் மின்சாரம் கொடுக்கல என்றபோது கிராம மக்கள் சிலர்.. 2016 ல அக்னி ஆற்றில் உள்ள கண்ணன் ஆறு மராமத்து செய்ய ரூ. 4 லட்சம் ஒதுக்கினாங்க. வேலை செய்ய வந்தவங்க 100 மீட்டர் வெட்டிட்டு இயந்திரங்களை கரை ஏற்றினாங்க. முழுசா வெட்டிட்டு இயந்திரங்களை எடுங்கன்னு விவசாயிகள் மறிச்சோம். மழை தொடங்கிருச்சு மழை முடிஞ்சதும் வெட்டிக் கொடுக்கிறோம்னு அப்போதைய பொறியாளர்கள் கனிமொழியும், மின்னல்கொடியும் உத்தரவாதம் கொடுத்து இயந்திரத்தை மீட்டு கொண்டு போனாங்க. அதன் பிறகு வரவே இல்லை. ஒப்பந்தக்காரர் எல்லா பணத்தையும் தேர்தல் செலவு செஞ்சாச்சு இனி வெட்ட முடியாதுனு சொல்லிட்டார். அதனால நாங்க போராடி 2017 ல அதிகாரிகள் வந்து வெட்டி கொடுத்தாங்க.
 

அப்பறம் 2018 ல அதே இடத்தில் குடிமராமத்து செய்ய ரூ. 14 லட்சம் ஒதுக்கினாங்க. அந்த பணிகள் பாசனதாரர் சங்கம் தான் செய்யனும் அதுபடி விவசாயிகள் இணைந்து சங்கம் அமைத்து வேலையை நாங்க செய்றோம்னு கேட்டோம் இப்ப வரை அந்த வேலை நிலுவையில இருக்கு.  இப்படி வேலைகளை சரியா செய்ய சொல்றதால எங்க பகுதிக்கு மின்சாரம் கொடுக்காம எங்களை இருட்டுல போட்டு வச்சிருக்காங்க. பல முறை மின்வாரியம், வட்டாட்சியர், ஆட்சியர்னு போய் பார்த்தாச்சு. ஒரு தனி நபர் ரோடு என் இடத்தில் இருக்குனு தடுக்கிறார்னு பதில் சொன்னாங்க. அப்பறம் அதையும் அதிகாரிகளே அளவீடு செய்து ரோடு ஊராட்சிக்கு சொந்தமானதுனு கண்டுபிடிச்சு ஒப்படைச்ச பிறகும் அதில் மின்கம்பம் நட்ட பிறகும் கம்பி இழுக்கல. மின்வாரிய அலுவலர்கள் நாங்க வரத் தயார் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கலனு சொல்றாங்க. 

 

 The storm hit the village for a year ... The authorities of indifference!


தாசில்தார் நான் இடத்தை அளந்து கொடுத்துட்டேனு சொல்றார். 18 ந் தேதி மறுபடியும் கம்பி இழுக்க வந்தாங்க. பழையபடி ஒருவர் தடுக்கிறார்னு சொல்லிட்டு பேசாம போயிட்டாங்க. அதன் பிறகு தான் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் பிறகும் பலனில்லை என்றனர் வருத்தமாக.

மேலும் எங்க ஊர் பிரச்சனை சம்மந்தமாக பி.ஆர்.பாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். ஆனால் மேலே இருந்து அழுத்தம் கொடுக்குறதா சொல்றாங்களாம். எங்க ஊருக்கு ஒரு தெருவுக்கு மின்சாரம் கொடுக்க கூடாதுனு தடுக்கிற சக்தி யார்னு தெரியனும். இன்னும் சில நாட்கள் பார்ப்போம். அப்பறம் மழை காலம் தொடங்கியதால் பாம்பு, பூச்சி வரத் தொடங்கிருச்சு. அதனால் தஞ்சாவூர்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளோட குடும்பம் குடும்பமா குடியேறப் போறோம். எங்க ஊருக்கு மின்சாரம் வந்த பிறகு அங்கிருந்து வெளியேறுவோம் என்றனர்.

புயல் தாக்கி ஒரு வருடமாக இருளில் தவிக்கும் கிராமத்திற்கு எப்போது தான் வெளிச்சம் பிறக்குமோ? தமிழக அரசு அலட்சியத்தால் கிராமமும் இருளில் தவிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தஞ்சை ஆணவக்கொலை; மேலும் மூன்று பேர் கைது

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Tanjore Massacre; Three more people were arrested

தஞ்சையில் நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் அடையாளம் கண்ட போலீசார் விசாரணை செய்து திருச்செல்வம், சின்ராஜ், முருகேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதே சம்பவத்தில் மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பல்லடம் போலீசார் திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை வழக்குப்பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பிவைத்ததால் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பும் நிலையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

டெல்டாவில் தொடரும் மழை; அணைகளின் நிலவரம்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Continued rain; Status of dams

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மேலும் சில இடங்களில் மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தஞ்சை அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் மயிலாடுதுறையில் மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்து வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், அம்பாசமுத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகையில் நாகூர், சிக்கல், பொரவச்சேரி, திருமருகல், போலகம், நரிமணம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

கன்னியாகுமரியில் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து குறைந்ததால் நான்கு நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருகில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நான்காவது நாளாக குளிக்கத் தடை நீடிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 139.85 அடி அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2,023 கன அடியாக உள்ளது. அணையில் நீர் திறப்பு 300 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 7,088 மில்லியன் கன அடியாக உள்ளது. அதேபோல் வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. நீர்வரத்து 2,187 கன அடியாக உள்ளது. அணையின் நீர் திறப்பு வினாடிக்கு 2,319 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5,681 மில்லியன் கன அடியாக உள்ளது.