
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது.
இதனையடுத்து தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2024) மாலைக்குள் புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் நாகையில் இருந்து தென் கிழக்கு திசையிலும் 370 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து 470 கி.மீ. தென் கிழக்கு திசையிலும், சென்னையில் இருந்து தெற்கு தென் கிழக்கு திசையில் 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
முன்னதாக மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என்றும், மறு அறிவிப்பு வரும் வரை படகுகளைக்கடற்கரையில் நிறுத்த வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சித்திரைப்பேட்டை மீனவ கிராமத்தில் படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் இறங்கியுள்ளனர். கரையோரம் இருக்கும் படகுகள் மற்றும் வலைகளை டிராக்ட்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.