மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இந்நிலையில் நிவாரணப் பணிகளுக்காக மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்து வட மற்றும் தென் சென்னை பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் இக்குழு வருகை தந்துள்ளது. இக்குழு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய ஆய்வுக் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து முதல் குழு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.
மத்திய அரசின் வேளாண்மை, உழவர் நலத்துறை, நிதித்துறை, மின்சார துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வட சென்னையை ஆய்வு செய்யும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் இன்னொரு குழு வேளச்சேரி,மடிப்பாக்கம்,மேடவாக்கம்,பெரும்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஆலோசனையில் வருவாய், நிதித்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை, காவல் உள்ளிட்ட துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.