Skip to main content

நின்றுபோன திருமணம்... ஏழு லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மணமகன் புகார்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

Stopped marriage ... Groom complains for seven lakh compensation

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது கடம்புலியூர் கிராமம். அங்கு வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் தனது தோழிகளுடன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாட்டு கச்சேரியில் நடனமாடினார். இதனால் கோபமுற்ற மணமகன் மணப்பெண்ணைக் கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு கோபித்துக்கொண்ட மணப்பெண் மணமகனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினார். இதனால் கடந்த 19ஆம் தேதி நடைபெற இருந்த திருமணம் திடீரென நின்று போனது. இதனால் மணமகன் வீட்டார் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

 

இந்த நிலையில் திருமணத்திற்கு வருகை தந்திருந்த செஞ்சியைச் சேர்ந்த உறவுக்கார வாலிபர் ஒருவரை மணமகனாகத் தேர்ந்தெடுத்து உடனடியாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமகளின் கன்னத்தில் அறைந்த மாப்பிள்ளை, திருமணம் நின்றுபோன கோபத்தில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் திருமண வரவேற்பு விழாவில் நடைபெற்ற பாட்டுக் கச்சேரியின் போது என்னையும் அந்த பெண்ணையும் சேர்ந்து நடனமாடச் சொல்லி வற்புறுத்தினார்கள். அப்போது நடனமாட எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டேன். ஆனால் அந்தப் பெண்ணின் கையை பிடித்து கொண்டு வேறு ஒருவர் நடனம் ஆடினார். இப்படி மற்றவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடலாமா?

 

இது தவறு என்று சுட்டிக் காட்டியதற்காக அந்தப் பெண்ணும் அவரது உறவினர்களும் என்னை அடித்தார்கள். இதனால் திருமணம் நின்று போனது. நானும் எனது குடும்பத்தினரும் அவமானப்படுத்தப்பட்டு, வேதனை அடைந்தோம். திருமண நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை சுமார் 7 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. தற்போது எனது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எனக்கு நஷ்ட ஈடாக ஏழு லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும். மேலும் என்னை ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.