Skip to main content

ஆவின் அதிகாரிகளின் உத்தரவு; கேள்விக்குறியாகும் எளியோரின் வாழ்வாதாரம்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Stop selling local milk to tea shops

 

தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் ஆவின் மூலம் பதப்படுத்தப்பட்டு பாக்கெட் பாலாகவும், பல்வேறு உணவுப் பொருட்களாகவும் மதிப்புக்கூட்டி விற்பனைக்கு வருகிறது. அதனால் ஆவினுக்கு அதிக அளவு பால் தேவைப்படுவதால் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலில் 10% மட்டும் உள்ளூரில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்து கொள்ளலாம். மீதமுள்ள 90% பாலை கூட்டுறவு சங்கங்கள் ஒப்பந்தப்படி ஆவினுக்கு அனுப்ப வேண்டும் என்று பால் வளத்துறை அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

இந்த நிலையில், பால்வளத்துறை சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் விதமாக கடந்த 10-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 70% செய்து வந்த உள்ளூர் விற்பனையை நிறுத்தியது. இதனால் பொதுமக்கள், டீ கடைக்காரர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் முதுநிலை ஆய்வாளர் திருப்பதி மற்றும் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைவருக்கும் பால் விற்பனை செய்ய முடிவான பிறகு, உள்ளூர் விற்பனை தொடங்கியதுடன், ஆவினுக்கு பால் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

 

இதுகுறித்து அமைச்சர் நாசர் நம்மிடம், “கூட்டுறவு சங்க முறைகேடுகளைத் தடுக்கவும், பிற ஊர்களுக்கு தேவையான பால் அனுப்பவுமே 10% உள்ளூர் விற்பனை போக மீதமுள்ள 90% பாலை ஆவினுக்கு அனுப்ப சொல்கிறோம்” என்றார். இந்த நிலையில், நேற்று திங்கள் கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலங்குடி டிஎஸ்பி, கீரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பால்வளத்துறை ஆணையர் அவர்களின் ஆணைப்படி உள்ளூர் விற்பனை 10% மட்டுமே பால் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், கீரமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் 44% சதவீதம் உள்ளூர் விற்பனை செய்யப்படுவதால் ஆவினுக்கான பால் குறைகிறது. ஆகவே, கீரமங்கலம் பகுதியில் டீ கடைகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் விற்பனை நிறுத்தப்படுகிறது. அதனால் கூட்டுறவு சங்க பணியாளர்கள், பால் வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அதே போல கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கச் செயலாளர் கணேசன் மற்றும் பணியாளர்கள் கீரமங்கலம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர். டீ கடைகளுக்கு பசும்பால் விற்பனை நிறுத்தியுள்ளதால் செவ்வாய் கிழமை கீரமங்கலம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட டீ கடைகள் மூடப்பட்டதுடன் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆவினுக்கு பால் ஏற்றிச் செல்லும் வாகனத்தைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பான சூழல் நிலவியது.

 

தகவலறிந்து வந்த கீரமங்கலம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்த பிறகு, ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலனிடம் பேசினார். டீ கடைகளுக்கு பால் விற்பனையை நிறுத்த வேண்டாம் என்றும், தற்போது உற்பத்தி குறைவாக இருந்தாலும் விரைவில் உற்பத்தி அதிகரிக்கச் செய்து ஆவினுக்குத் தேவையான பாலை அனுப்புவதாகவும் கூறிய பிறகு டீ கடைகளுக்கு பால் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறைபிடிக்கப்பட்ட பால் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

 

இது குறித்து ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலன் நம்மிடம் பேசுகையில், “கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடக்காமல் வரைமுறைப்படுத்தவும், ஆவின் மூலம் தரமான பால் வழங்கவும்தான் உள்ளூர் விற்பனையை நிறுத்தக் கூறியுள்ளோம். வீடுகளுக்குத் தேவையான பால் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடைகளுக்கு வழங்கும் பால் தரம் ஆய்வு செய்து வழங்க வேண்டியுள்ளது. அதனால்தான் ஆவினுக்கு ஏற்றி வருகிறோம். கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்யும் பாலை ஆவினுக்கு அனுப்புவதாகத்தான் ஒப்பந்தம் செய்துள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தலைமை மருத்துவரிடம் பேசினோம்” - விஜயகாந்த் உடல் நலம் குறித்து நாசர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

nassar about vijayakath health condition

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் உடல்நிலை குறித்து விஜயகாந்த்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது நாசர் பேசுகையில், “கேப்டன் நல்லாயிருக்கார். எல்லா புலன்களும் செயல்படுது. கொஞ்ச நாளாக வெளியான செய்திகளெல்லாம் மிகைப்படுத்தியதுதான். தலைமை மருத்துவரை பார்த்தோம். அவரும் நல்லாயிருப்பதாக சொன்னார். அதனால் மிகைப்படுத்தின செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். இரு மாதங்களுக்கு முன்னால் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறார். அதனால் கேப்டன் திரும்ப வருவார். எங்களுடன் பேசுவார். எங்களுடன் தோன்றுவார்” என்றார்.  

 

 

Next Story

கொதிக்க கொதிக்க பால் அபிஷேகம்; அதிகாரிகளை அலறவிட்ட பெண்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Employees who went to remove the platform store; The woman who anointed milk to boil

 

கேரளாவில் நடைமேடையில் உள்ள கடைகளை அதிகாரிகள் அகற்ற முயன்ற போது பெண் ஒருவர் அதிகாரிகள் மீது கொதிக்கக் கொதிக்க பாலை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் ஆலப்புழாவில் செங்கனூர் என்ற பகுதியில் உள்ள சிறிய நகரில் வெல்லவூர் ஜங்சன் எனும் பகுதியில் நடைமேடை பகுதியில் பெண் ஒருவர் டீக்கடை நடத்தி வந்துள்ளார். அந்த டீக்கடையால் பொதுமக்கள் நடப்பதற்கு சிரமம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் அரசு ஊழியர்களும், போலீசாரும் அந்த கடைக்கு வந்தனர். கடையில் இருந்த பொருட்களை எடுத்து அகற்ற முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஆவேசமாக கத்தினார். கடையில் இருந்த மற்றொரு பெண்ணும் எதிர்ப்பு தெரிவித்தார். முன்னரே சொல்லியிருந்தால் நாங்களே காலி செய்திருப்போம் என தெரிவித்தனர். முன்பே  நோட்டீஸ் அனுப்பியிருந்தால் நாங்களே கடையை காலி செய்திருப்போம் என கதறினர்.

 

இதனால் அந்த சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் கடையை காலி செய்வதிலேயே குறியாக பொருட்களை எடுக்க முயன்றனர். இதுவரை அழுது கதறிய பெண்கள் ஒருகட்டத்தில் ஆத்திரமடையத் தொடங்கினர். அவர்களது ஆத்திரத்தையும் பொருட்படுத்தாமல் பொருட்களை ஊழியர்கள் எடுத்துக்கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத விதமாக கடையில் டீக்காக கொதித்துக் கொண்டிருந்த பாலை சடார் என அந்த ஊழியர்கள் மற்றும் காவலர்கள் குழுவின் மீது வீசினர். இதனால் அனைவரும் அலறியடித்து ஓடினர். மேலும் கடையில் வடைக்காக கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்யை எடுத்து ஊற்ற முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.