Skip to main content

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
sterlite protest

 

 

 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் 100வது நாளின் போது (மே 22, 2018), பொதுமக்களுக்கு எதிராக நடைபெற்ற காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை அனைத்துக் கட்சிகளும் அரச பயங்கரவாதம் என கண்டித்திருந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்திருப்பதாகவும், குறைந்த தொலைவில் பின்னால் இருந்து சுடப்பட்டிருப்பதாகவும் அவர்களது பிரேதப் பரிசோதனை முடிவுகளை கொண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் பிரேதப் பரிசோதனையில் பல்வேறு மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூலம் கிடைத்த அறிக்கைகளை கொண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 

துப்பாக்கிச் சூட்டின்போது, 17 வயதான சிறுமி ஸ்னோலின் பின்பக்கத் தலை வழியாகக் குண்டு பாய்ந்து வாய் வழியாக வெளியேறியுள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 40 வயதான ஜான்சி என்ற பெண்ணின் காதில் குண்டு பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதான மணி ராஜன் என்பவரது நெற்றியின் வழியாகக் குண்டு பாய்ந்துள்ளது. மேலும், கொல்லப்பட்டவர்களில் எட்டு பேரின் உடலில், பின்புறமாகத் தலை மற்றும் உடல் பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது என அந்த செய்தி தெரிவிக்கின்றது.

 

 

இதன்மூலம் மக்களை சுட்டுக்கொன்று அவர்களை முடமாக்கி, அவர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என்ற திட்டமிட்ட சதியின் அடிப்படையில் தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறையின் நடவடிக்கை அரங்கேறியுள்ளது. போராட்டக்காரர்களை குறிவைத்து, போராட்டத்தின் போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய துப்பாக்கி சூடு விதிமுறைகளை மீறி, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி திட்டமிட்டு 13 பேரை சுட்டுக்கொன்றுள்ளது என்பது தெளிவாகின்றது. இந்த அரச பயங்கரவாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.    

 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போதே விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டது தெளிவானது. போலீஸ் வேன் மீது ஏறிய கமாண்டோ படை வீரர்கள் பொதுமக்களை ராணுவ வீரர்கள் போல் குறிவைத்துச் சுட்டது இதுவரை இல்லாத ஒன்று. ராணுவத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பலநூறு மீட்டர் சீறிப்பாயும் செல்ஃப் லோடிங் ரைபிள் வகை துப்பாக்கிகளை கொண்டு அப்பாவி பொதுமக்களை கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

 

 

இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அது திட்டமிட்ட காவல்துறை படுகொலைகள் தான் என்பது தெளிவாகின்றது. ஆகவே, அந்த சம்பவத்தில் ஈடுபட்ட, உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதோடு, காவல்துறை விதியை மீறிய அவர்கள் இனி அந்த பணியில் தொடர முடியாத வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
 

 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார்.