Skip to main content

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்!பெ. மணியரசன்

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் விடுத்துள்ள கண்டன அறிக்கை: ’’உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அவ்வாலையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி சுற்றுவட்டார மக்கள் கடந்த ஆண்டு (22.05.2018) பேரணியாகச் சென்றபோது, தமிழ்நாடு அரசின் காவல்துறை திட்டமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

 

m

 

முன்கூட்டியே தீர்மானித்தபடி துப்பாக்கிச் சூடு நடத்தி, 15 பேரைக் கொன்றது. நூற்றுக்கணக்கான பேர்களை படுகாயப்படுத்தியது. இந்தப் படுகொலை நடந்த மறுநாளே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நாங்கள் தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னோம். அத்துடன் உயிரிழந்தோர் இல்லத்திற்கும் சென்று ஆறுதல் கூறினோம்.
 

இன்று (22.05.2019), ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் சார்பில் முதலாமாண்டு இரங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்கு தூத்துக்குடியில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குச் சென்று கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளனர். உயர் நீதிமன்றமும் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என வரம்பு விதித்துள்ளது.

 

முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க அனுமதி மறுத்த இராசபக்சேவின் ஈவிரக்கமற்ற கொடுங்கோன்மையைத்தான் தமிழ்நாடு அரசின் இச்செயல் நினைவூட்டுகிறது. தூத்துக்குடி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமார் அவர்களை நாகர்கோவிலிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று காவல்துறையினர் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

 

மனித உயிரிழப்புகளுக்கு துக்கம் கடைபிடிக்கக்கூட அனுமதி மறுக்கும் தமிழ்நாடு அரசின் மனிதநேயமற்றச் செயலையும், அநாகரிகத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

தங்கள் மக்களின் வாழ்வுரிமையைக் காக்க அறப்போராட்டம் நடத்தி உயிரீகம் செய்த வீரர்களுக்கும் – வீராங்கனைகளுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறது!’’

சார்ந்த செய்திகள்

Next Story

பிரிட்டிஷ் கொண்டுவந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வேண்டாம்... டி.ஏ.எஸ், டி.பி.எஸ் கொண்டுவாங்க'' -பெ.மணியரசன் பேச்சு!

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Do not bring IAS, IPS brought by the British... Bring TAS, TPS'' - P. Maniyarasan speech!

 

தமிழக வேலைவாய்ப்புகளில் வடமாநிலத்தவரை திணிக்கக் கூடாது, தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11 ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள முற்றுகை போராட்டம் குறித்த விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், "தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவன அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வட மாநிலத்தோருக்கே வேலை வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களில் அம்மாநிலத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்க சட்டம் உள்ளது போல், தமிழகத்திலும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே வேலை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு துறையில் நூறு விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பவற்றுக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

 

Do not bring IAS, IPS brought by the British... Bring TAS, TPS'' - P. Maniyarasan speech!

 

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களுக்கான பணி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே நடத்த வேண்டும், இந்திய அரசு தேர்வாணையம் நடத்தக்கூடாது. இந்திய அரசு தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால், அஞ்சல் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் இடம்பெறுவதில்லை. திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மூலம் ஆட்கள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது கோச்சிங் சென்டர் மூலமாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்திய முழுவதும் பொதுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள், வடமாநில நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. மிகக் குறைந்த அளவே தமிழர்கள் நிறுவனங்கள் வைத்துள்ளதால் தொழில் முனையும் தமிழர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். பிற நாடுகளில் உள்ளது போல், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டால், அந்நிறுவனத்தில் தமிழர்கள் 50 சதவீதம் மூலதனமாக சேர்க்கப்பட்டால் மட்டுமே உரிமை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  

 

வட கிழக்கு மாகாணங்களான, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் இருப்பதுபோல் வெளி மாநிலத்தவர்கள் உள் நுழைவுக்கான அனுமதி வழங்கும் அதிகாரத்தைத் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு அனுமதி வழங்கும் அதிகாரத்தை கேட்டுப்பெற வேண்டும். தமிழ்நாடு அரசு பணி தருவோர் - பணி பெறுவோர் வாரியம் அமைத்து தமிழ்நாட்டில், தொழில் முனைவோருக்கு தொழிலாளர்கள் கிடைக்கும் வகையிலும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் சட்டப்படியான முகவாண்மையை உருவாக்க வேண்டும்.

 

Do not bring IAS, IPS brought by the British... Bring TAS, TPS'' - P. Maniyarasan speech!

 

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 75 சதவீத விழுக்காடு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியதை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்காமல், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வட மாநில நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதை தடுக்கும் வகையில் தமிழக அரசு உள்நாட்டு நுழைவு அனுமதி (inner line permit) அதிகாரத்தைக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநில உயர் அதிகாரிகள் இருப்பதால், மொழி தெரியாமல் நிர்வாக கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்ற பிரிவே இருக்கக் கூடாது. தமிழ்நாடு பொதுத் தேர்வு வாரியம் அமைத்து டி.ஏ.எஸ், டி.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தி வருகிறது.

 

இந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் துறை மேற்கு மண்டல தலைமையகத்தினை தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் மாபெரும் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது" என்றார்.

 

முன்னதாக திருவள்ளுவர் கலைக்குழுவின் தப்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

Do not bring IAS, IPS brought by the British... Bring TAS, TPS'' - P. Maniyarasan speech!

 

இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசிய பேரியக்க மாநில துணைத் தலைவர் க.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வேல்சாமி, மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் மு.செந்தமிழ்ச்செல்வி, மகளிர் ஆயம் பொருளாளர் ம.கனிமொழி, அமைப்புக்குழு உறுப்பினர் மு.வித்யா, தெய்வத் தமிழ்ப்பேரவை கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சுப்ரமணியசிவா, பொதுக்குழு உறுப்பினர்கள் சிதம்பரம் ஆ.குபேரன், பி.வேல்முருகன், த.சக்திவேல், மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் வே.தமிழ்மொழி, திருவள்ளுவர் தமிழர் மன்ற செயலாளர் தி.ஞானப்பிரகாசம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

 


 

Next Story

‘கஜா புயலால் கூட சாய்க்க முடியாத பனை மரங்களை வெட்டி சாய்க்கும் பண வேட்டைக்காரர்கள்’ - பெ. மணியரசன் 

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

‘Money hunters cutting down palm trees that could not be tilted even by Gajah storm’ - p. Maniyarasan


புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த சில வருடங்களாக தமிழர்களின் மரமான பனை மரங்களை வெட்டி சூளைகளில் விறகாக எரித்துவருகிறார்கள். தொடக்கத்தில் ஏரி, குளம், சாலை ஓரங்களில் நின்ற மரங்களை வெட்டி அழித்தோர், இப்போது விவசாயிகளின் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை ரூ. 200க்கு வாங்கி வெட்டி எடுத்துச் செல்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர் அதாள பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருப்பதை அவர்கள் உணரவில்லை. பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை இயற்கையின் காதலர்களின் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் எஞ்சியுள்ள பனை மரங்களைப் பாதுகாக்க பனைப் பாதுகாப்புச் சட்டம் தேவை என்கிறார் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்.
 

இதுகுறித்து அவர் கூறியதாவது: "கஜா புயலால் கூட சாய்க்க முடியாத பனை மரங்களைத் தமிழ்நாட்டில் பண வேட்டைக்காரர்கள் வெட்டிச் சாய்க்கிறார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் பனை அழிப்பு வணிகம் வேகமாக நடந்துகொண்டுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வுள்ள அமைப்புகள் பண வேட்டைக்காரர்களின் பனை வேட்டையை அங்கங்கே தடுத்துப் போராடிவருகின்றனர். 


திருத்துறைப்பூண்டி மற்றும் அதை ஒட்டிய சேகல், கீழ்வேளூர், தீவம்பாள்பட்டினம், கொருக்கை, மீனம்பநல்லூர், மாங்குடி மற்றும் வேதாரணியம் பகுதி கிராமங்கள் போன்ற பகுதிகளில் உள்ள பனை மரங்களை செங்கல் சூளைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த சரக்குந்துகளில் தொடர்ந்து ஏற்றிச் செல்கிறார்கள்.
 

ஒரு பனை மரத்தை 200 ரூபாய்க்கு எரிபொருளாக விற்கும் அவலம் நெஞ்சைப் பதைக்க வைக்கிறது. பசுமைச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜாவும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும், மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் அப்பகுதிகளில் வெட்டப்பட்ட பனை மரங்களை ஏற்றிச் சென்ற சரக்குந்துகளை மறித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துவரும் செய்திகள் நாளேடுகளிலும், செய்தி ஊடகங்களிலும் வந்துகொண்டுள்ளன. ஆனாலும் பனைவேட்டை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

 

தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த இலங்கை அரசு கூடப் பனை மரங்களை வெட்டத் தடை விதித்துக் கடும் சட்டம் இயற்றியுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட சிறை அடைப்பு எதுவுமின்றி பனை வேட்டையர்கள் தப்பிவிடுகிறார்கள். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2018இல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 9 கோடிப் பனை மரங்கள் இருப்பதாகவும், அதில் 5½ கோடி மரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால், அதில் இன்று 2½ கோடி பனை மரங்கள்தாம் இருக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூறுகிறார்கள்.

 

தமிழ்நாட்டின் அடையாளச் சின்னம் பனை மரம்! வேர் தொடங்கி பனை மட்டை, இலை நுனிவரை பயன்படும் மரம் அது! நம்முடைய பழைய இலக்கியங்களைப் பதிய வைத்துப் பாதுகாத்தது பனை ஓலைகள்! ஆழத்தில் கிடக்கும் நிலத்தடி நீரை மேலே இழுத்து, மேல் மண்ணில் ஈரப்பதம் காப்பது பனை வேர்களே. 


கிளைகள் இல்லாத பனைமரம் நுங்கு, பதனீர், பனங்கற்கண்டு, பனைவெல்லம், பனம்பழம், பனங்கிழங்கு என்று எத்தனை கிளை வகை உணவுப் பொருட்களைத் தன்னுள் பொதிய வைத்துள்ளது. வீடுகட்ட மிக வலுவான மரம் பனை. தென்னந்தோப்பு வளர்க்கிறோம். ஆனால், பனந்தோப்பு வளர்ப்பதில்லை. பழைய மரங்கள், தானே முளைத்த மரங்கள், ஆர்வலர்கள் ஆங்கங்கே விதைத்த மரங்கள் என்று பனை மரங்கள் வளர்கின்றன.


அவற்றைத் தொழிற்சாலைக் கொள்ளை நோய் அழித்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு பசுமை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு. கூடுதலான பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. பனைப் பாதுகாப்புக்கென்று புதிய சட்டம் இயற்ற வேண்டும்; அதில் சிறைத் தண்டனைப் பிரிவு சேர்க்க வேண்டும். அத்துடன், பனைப் பாதுகாப்பு, பனை வளர்ப்பு விழிப்புணர்வை அரசும் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்கிறார்.


மேலும், இதேபோல பனை மரங்களைப் பாதுகாக்க கோரி கிரீன் நீடா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தலைமைச் செயலரிடம் மனு கொடுக்கவும் உள்ளனர்.