Skip to main content

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் படங்களுடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..

Published on 29/04/2021 | Edited on 29/04/2021

 

sterlite plant opening for oxygen supply people oppose

 

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்; பலர் காயமடைந்தார்கள்.

 

பின்னர் ஆலையைத் தமிழக அரசு மூடியது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, தற்போதைய கரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, “நாங்கள் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயார் செய்து இலவசமாகவே வழங்குகிறோம்” என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

 

விசாரணைக்குப் பின்பு, 4 மாதங்களுக்கு மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என சில வழிகாட்டு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டி அதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனாலும் தூத்துக்குடி மக்களிடையே ஆலை திறப்பிற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் இயக்கம், “மக்களின் கருத்துப்படி ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.

 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் பாத்திமாபாபு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் வக்கீல் அரிராகவன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அது தொடர்பாக மனு அளித்தனர்.

 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் கண்டித்து இன்று (29.04.2021) கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்பபை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் வெள்ளை சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து செல்ல வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை அட்டைகளை வைத்து அறவழிப் போராட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார் வக்கீல் அரிராகவன்.

 

இதனிடையே,, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் படங்களை ஏந்தியாவாறு ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட அவர்களின் உறவினர்கள், ஸ்டெர்லைட்டை திறக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அவர்களின் குழந்தைகளும் கலந்துகொண்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளில் ஒரு சிறுவன், கடுமையாகக் கோஷங்களை எழுப்ப அதனைத் தொடர்ந்து உறவினர்களும் கண்டனக் குரலெழுப்பினர். ‘போராட்டம் இது போராட்டம்; மக்களுக்கான போராட்டம். கேக்கலையா கேக்கலையா எங்களின் குரல் கேக்கலையா. அனுமதிக்காதே அனுமதிக்காதே தட்டுப்பாடு என்ற பெயரில் ஆலையைத் திறக்க அனுமதிக்காதே. மத்திய அரசே நாடகமாடாதே. நாசகார ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்’ என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். நாளுக்கு நாள் ஸ்டெர்லைட் திறப்பு அனுமதியை எதிர்த்து மக்கள் போராட்டம் தீவிரமாகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

இரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
police confiscated liquor  who were smuggled in luxury car in Thoothukudi

இந்தியாவில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தொடங்கிய காரணத்தால், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்தக் காரை கவனித்த போலீசார், உடனே காரை நிறுத்தும்படி சைகை காண்பித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கார் வேகமாக வந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், உடனே அந்தக் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, அந்தக் காரில் தேர்தல் செலவிற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா?... என்ற கோணத்தில் காரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த சொகுசு காருக்குள் விலை உயர்ந்த 12 பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. ஆனால், அந்த வகை மதுபாட்டில் அரசு மதுபான கடைகளில் கிடைக்காது என சொல்லப்படுகிறது. இதனால், இது குறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் எந்த பதிலும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அதே காருக்குள் பெரிய பை ஒன்று இருந்துள்ளது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என சோதனையிட்ட போலீசாருக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.

காரணம் அந்தப் பையில் மேலும் சில மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது குறித்து ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கார் ஓட்டுனர், நாகர்கோவிலைச் சேர்ந்த வினோத்குமாரின் மகன் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த விலை உயர்வான மதுபாட்டில்கள் எந்த இடத்தில் வாங்கப்பட்டது என வாய்த்திறக்கவில்லை.

அதே சமயத்தில் இந்த மது பாட்டில்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்காக வாங்கி வரப்பட்டதா?... என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அந்த ஓட்டுநரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில், மது பாட்டிலோடு வந்த சொகுசு கார் ஒன்று, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.