Skip to main content

ஸ்டெர்லைட் எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் தி.மு.க.இளைஞரணி..!- ஜோயல் வேண்டுகோள்!! 

Published on 04/05/2018 | Edited on 04/05/2018
Sterlite Industries

   

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையை நிரத்தரமாக மூடவலியுறுத்தி பொதுமக்கள் தாமாகவே ஒற்றிணைந்து தொடர் போராட்டங்களை எழுச்சியோடு தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தொடர்போராட்டத்தின் தொடர்ச்சியாக வரும் 5ம் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பு அருகில் ''ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்'' சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது இதில் கலந்து கொள்ள தி.மு.க. இளைஞரணிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மாநில இளைஞரணி துணைச்செயலாளரான ஜோயல். 
 

 அவர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து., " தமிழக அரசு ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையை நிரத்தரமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும், புற்றுநோய் பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், உயிர்கொல்லி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு உறுதுணையாக இருந்த அரசுத்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடரவேண்டும் என்பது உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை வெற்றி பெறசெய்திடவேண்டியது நமது மண்ணின் மக்களின் தலையாய கடமையாகும். மராட்டிய மண்ணில் இருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்டது போன்று, நமது மாவட்ட மண்ணில் இருந்தும் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையை விரட்டி அடித்திடுவதற்காக நடைபெறும் இந்த எழுச்சிமிகு உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக இளைஞர் அணியினர், இளைஞர்கள், இளம்பெண்கள், தாய்மார்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஜாதி, மத, இன பாகுபாடுஇன்றி தவறாமல் குடும்பத்தோடு வந்து பங்கேற்று நமது மண்ணின் எதிர்ப்பினை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்திடவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 
 

   நமது மாவட்ட மக்களின் எழுச்சிமிகு தொடர் போராட்டத்திற்கு தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் தமிழர்களும் ஆதரவுக்கரம் நீட்டி, ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருவதன் மூலமாக வரும் நாட்களில் ஸ்டெர்லைட் நச்சாலைக்கு நிரத்தரமாக மூடுவிழா நடத்தி விடுவது என்பது உறுதியாகியுள்ளது. திமுக இளைஞர் அணியானது மாண்புமிகு தளபதியாரின் ஆனைப்படி, ''தூத்துக்குடியை தூய்மையாக மாற்றுவதற்கும், ஸ்டெர்லைட் நச்சு தொழிற்சாலையை இம்மண்ணில் இருந்து மக்களோடு மக்களாக ஒற்றிணைந்து விரட்டி அடிப்பதற்கும் எந்த சர்வபலி தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்'' என்பதை இந்நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்." என்றிருக்கின்றது அந்த அறிக்கை. இதனால் தி.மு.க. இளை ஞரணியும் பெருமளவில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி மக்கள் உறுதுணையோடு ஆலையை தொடங்குவோம்! - அனில் அகர்வால்

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

தூத்துக்குடி மக்கள் உறுதுணையோடு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்குவோம் என அந்த ஆலையின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
 

anil

 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளான மே 22ஆம் தேதியன்று, ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக நடந்துசென்றனர். அப்போது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது பொதுமக்களும் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தத் தாக்குதலின் போது காவல்துறையினர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதுவரை 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி, காவல்துறையினரின் அத்துமீறல் காரணமாக தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 

இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையின் தலைவர் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘தூத்துக்குடியில் நேற்று நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்ததில் இருந்து நான் சோகத்தில் உள்ளேன். இது மிகவும் துரதிஷ்டவசமானது. என் இரங்கலை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டெர்லைட் ஆலை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. நாங்கள் அரசு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஆலையை மீண்டும் திறந்து செயல்படுத்த இருக்கிறோம். மேலும், நாங்கள் அரசு மற்றும் நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவுகளை மிகத்தீவிரமாக பின்பற்றுகிறோம். தூத்துக்குடி வாழ் மக்களின் செழிமையான வாழ்வை உறுதிசெய்வதில் முழு கவனம் செலுத்துகிறோம். அதேபோல், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் செழுமைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும்படி முழுமையாக செயல்படுவோம் என்பதில் உறுதியளித்து, தூத்துக்குடி மக்களின் ஆதரவோடு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடர இருக்கிறோம். மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன். நேற்றைய சம்பவம் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது’ என பேசியுள்ளார்.

 

 

Next Story

யார் ஆட்சியில் துப்பாக்கிச்சூடுகள் அதிகம்?

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

விடுதலை பெற்ற பிறகு தமிழகத்தில் முதன்முதலில் காங்கிரஸ் ஆட்சியில்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்தி மொழியை கட்டாயப்பாடமாக திணிக்க மத்திய அரசு முயற்சி செய்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர்.

 

அதன்பிறகு, 1972 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கோவில்பட்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

 

1980ஆம் ஆண்டு எம்ஜியார் ஆட்சியில் இலவச மின்சாரம், இலவச உரம் கோரி நாராயணசாமி நாயுடு தலைமையில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் 14 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு குருஞ்சாக்குளத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர்.

 

shoot

 

1985 ஆம் ஆண்டு சென்னையில் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நடத்திய போராட்டத்தை ஒடுக்க மீனவ நண்பனாகவும், படகோட்டியாகவும் நடித்த எம்ஜியார் உத்தரவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அதில் 3 மீனவர்களும், பரமக்குடியில் நடைபெற்ற சாதிக்கலவரத்தை ஒடுக்க நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேரும் பலியாகினார்கள்.

 

அருப்புக்கோட்டை அருகே ராட்சத ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை எதிர்த்து 1987 ஆம் ஆண்டு விவிசாயிகள் நடத்திய போராட்டத்தை அடக்க துப்பாக்கிசூடு நடத்த எம்ஜியார் உத்தரவிட்டார். அதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

 

1992 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய போரட்டத்தை அடக்க ஜெயலலிதா துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிட்டார். அதில் 2 பேர் பலியாகினர். 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் காஞ்சிபுரத்தில் பஞ்சமி நிலத்தை மீட்க தலித் மக்கள் நடத்திய போராட்டத்தை அடக்க துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 2 பேர் பலியாகினர்.

 

1995 ஆம் ஆண்டில் நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சாதிக்கலவரத்தை அடக்க ஜெயலலிதா உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 2 பேர் பலியாகினர்.

 

1991 ஆம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா, எம்ஜியாரைப் போலவே தனது ஆட்சிக்காலத்திலும் துப்பாக்கிச் சூடுக்கு மிகச் சாதாரணமாக உத்தரவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

 

1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கயத்தாறு, சிவகாசி ஆகிய இடங்களில் போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் உயிர்ப்பலி ஏதுமில்லை.

 

1997 ஆம் ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தடையை மீறிய டாக்டர் கிருஷ்ணசாமியை போலீஸார் கைது செய்தனர். இதைக் கண்டித்து நெல்லையில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட  மோதலைக் கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிடப்பட்டது. அதில் ஒருவர் பலியானார்.

 

மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் கூலி உயர்வுகேட்டு நடத்திய போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நெல்லையில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தை அடக்க தடியடி நடத்தினார்கள். தடியடியில் தப்பிக்க கலைந்து ஓடியவர்கள் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். இதில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக கூறப்பட்டாலும் அதற்கு ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது.

 

2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தண்டனைபெற்ற குற்றவாளி என்ற நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக ஜெயலலிதா இரண்டாம் முறையாக பதவியேற்றார். உடனே திமுக தலைவர் கலைஞரை கைது செய்ய உத்தரவிட்டார். நள்ளிரவில் நடைபெற்ற அந்த கைதை கண்டித்து திமுகவினர் நடத்திய போராட்டத்தை கலைக்க ஜெயலலிதா துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 4 திமுகவினர் பலியாகினர்.

 

2011 ஆம் ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்காக சென்றவர்கள் மீது இன்னொரு பிரிவினர் நடத்திய தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர ஜெயலலிதா துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 7 பேர் பலியாகினர்.

 

2013 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலும், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி தேனியில் பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்திலும், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் காதல் பிரச்சனையால் ஏற்பட்ட மோதலைக் கலைக்கவும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மூன்றுசம்பவங்களும் அதிமுக ஆட்சியில் நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்போது, 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் 13 சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

மொத்தத்தில் எம்ஜியார், ஜெயலலிதா ஆட்சிகளில்தான் எதற்கெடுத்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.