Skip to main content

போதை மாத்திரைக்காக இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்யும்  அவலம்!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

 stealing and selling two-wheelers for drugs!

 

 

சென்னையில் வாகன திருட்டு சம்பவங்களை தடுக்க காவல் துறையினரும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த இரண்டு கொள்ளையர்களை  காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அந்த கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கடந்த 5ஆம் தேதி இரவு ஆர்.கே நகர், ஆசிஸ் நகர் வைத்தியநாதன் தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்ரக இருசக்கர வாகனமான யமஹா R15 வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் கடந்த 18ஆம் தேதி வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் பல்சர் 220 இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுபோன்ற தொடர் இரு சக்கர வாகனத் திருட்டை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் தனிப்டை அமைக்கப்பட்டது. 

 

இருசக்கர வாகனங்களை திருடிய இடங்களில் இருந்த சி.சி.டி.விகாட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபொழுது அதில் முககவசத்தோடு அரைக்கால் டவுசர் அணிந்த இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. 

 

இது போன்ற தொடர்ந்து  30க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு எண்ணூர் பகுதியை சேர்ந்த அரவி (எ) அரவிந்தன், அவரது கூட்டாளியான கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாய்கிருஷ்ணன் ஆகிய இருவரும் இந்த இரு சக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

 

இருவரையும் தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் மூலகொத்திரம் பகுதியில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தன. சாய்கிருஷ்ணனன் கடைசியாக வியாசர்பாடியில் மளிகை கடையில் கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபொழுது அரவிந்தனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

 

கடந்த மாதம் ஜாமினில் வெளியேவந்த இருவரும் சேர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் உயர்ரக இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வெளி மாவட்டங்களில் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்து, அதில் வரும் பணத்தில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா வாங்கி பயன்படுத்தியுள்னர்.

 

சாதாரண வாகனத்தை திருடினால் குறைந்த விலைக்கே விற்பனை செய்ய முடியும் என்பதால் உயர்ரக வாகனத்தை குறிவைத்து திருடுவார்களாம், அதற்காக தனியாக டூப்ளிகட் சாவி கொத்து ஒன்றை தனியாக வைத்துள்ளார்களாம்.

 

ஜெயிலில் இருந்து வந்ததும் தி நகரில் தான் தங்களது முதல் திருட்டை ஆரம்பித்துள்ளனர். இருசக்கர வாகனத்தை திருடி அந்த வாகனத்தின் மூலம் செல்போன் பறிப்பிலும் ஈடுப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தைத் திருடி  விற்ற பணத்தில் போதைப்பொருள் வாங்கும் அவர்கள், பணம் தீரும் நிலையில் வேறு திருட்டில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்தது. 

 

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மூன்று உயர்ரக இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு இரண்டு லட்சம் ஆகும். இது தொடர்பாக பேசிய காவல் ஆய்வாளர் தேவேந்திரன், “ஒருவர் சிறுக சிறுக சேமித்த பணத்தில் ஆசை ஆசையாய் வாங்கிய வாகனத்தை, கொள்ளையர்கள் மிகவும் எளிதாக திருடி சென்றுவிடுகின்றனர். இதற்காக கொள்ளையர்கள் பல்வேறு டெக்னிக்குகளை கையாள்கின்றனர். எனவே வாகனங்களின் உரிமையாளர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம் எனவும்,  கள்ள மார்க்கெட்டில் இதுபோன்று மிகவும் குறைவான விலையில் ஒரு சிலர் வாகனங்களை விற்பனை செய்கின்றனர். விலை மிகவும் குறைவாக இருக்கிறதே என ஆசைப்பட்டு வாங்கி சிலர் சிக்கலில் சிக்கி கொள்கின்றனர். எனவே செகண்ட் ஹேண்ட் வாகனங்களை வாங்கும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்” எனவும் எச்சரிக்கை செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Due to the scorching heat, the two-wheeled vehicle is on incident

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் விஷ்ணு (28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் கோயில் எம்ஜிஆர் கல்லூரி பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து ஏதோ புகை வந்ததை அறிந்த விஷ்ணு பதறிப் போய் வாகனத்தை நிறுத்திவிட்டு பார்க்கையில் பெட்ரோல் டேங்க்கில் இருந்து கசிந்த பெட்ரோல் வாகனத்தின் மீது பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஷ்ணு உடனடியாக நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகாமையில் கேனில் இருந்த தண்ணீரை ஊற்றி உள்ளார். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் இருசக்கர வாகனம் முழுவதும் மளமளவென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. வாகனம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு சிதறி ஓடி உள்ளனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனம் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வெப்பம் கோடை காலங்களில் நிலவுகிறது. இந்த ஆண்டு வெப்ப காற்றும், வெப்ப சலனமும் தொடர்ச்சியாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக வீசிக் கொண்டிருக்கிறது. வேலூர், திருவண்ணாமலை,  திருப்பத்தூர், விழுப்புரம் போன்ற தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் வானிலை மையத்தினரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர், குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

இந்த அதீத வெப்பத்தால் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடிப்பது, தீப்பற்றி எரிவது போன்றவை நடக்கத் தொடங்கியுள்ளன . இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கோடை காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்ப வேண்டாம், டீசல் நிரப்ப வேண்டாம் தினமும் ஒரு முறையாவது பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து அதில் உள்ள காற்றை சிறிது நேரம் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

Next Story

கிணற்றில் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Two people loses theri livetrying to pick up a bike that fell into a well

கன்னியாகுமரியில் கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலிங்கம். செங்கல் சூளை தொழிலாளியாக இருந்த ஸ்ரீ லிங்கம் கிணற்றில் விழுந்த பைக்கை எடுப்பதற்காக கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதற்கு பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவனையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

இந்தநிலையில் இருவரும் கிணற்றுள் இறங்கி பைக்கை மீட்க முயன்ற போது பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்ததால் தண்ணீரில் ரசாயன கலப்பு ஏற்பட்டு மூச்சு திணறி உயிரிழந்தனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுள் இறங்கி ஸ்ரீலிங்கம் மற்றும் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பைக்கை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய இருவர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.