Status of Bhavanisagar Dam

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.

Advertisment

அதே சமயம் நீர்வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காகத்தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.96 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 362 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.26 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.10 அடியாகவும், வறட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.05 அடியாகவும் உள்ளது.