Skip to main content

29 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு! 

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

Statues abducted 29 years ago recovered!

 

நாகை மாவட்டம், சன்னியாசி பனங்குடி கிராமத்திலுள்ள தாளரணேசுவரர் கோயிலில் ஆடிப்பூர அம்மன் சிலை - 1, வெண்கல குடம் - 1, மணி 1, நாகாபரணம் - 1, செம்பு கலசம் 2 உள்ளிட்டவை கடந்த 1992ஆம் ஆண்டு காணாமல் போனது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த அனைத்து சிலைத் திருட்டு வழக்குகளையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டபோது சில வழக்கு கோப்புகள் மாயமாகி போனதாக புகார்கள் எழுந்தன. அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி காவல் நிலைய வழக்கு கோப்பு கிடைக்காமல் புதிதாக பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில், காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபுவின் உத்தரவுப்படி சிலைத் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி. ஐ.ஜி. தினகரன், எஸ்.பி. பொன்னி, கூடுதல் எஸ்.பி. இராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் எஸ்.ஐ. தமிழ்செல்வன், பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 

 

இக்குழு தற்போது, 29 ஆண்டுகளுக்கு முன் சன்னியாசி பனங்குடி, தாளரணேசுவரர் கோயிலில் களவு போன ஆடிப்பூர அம்மன் உலோகச் சிலை மற்றும் அந்தக் கோயில் வழிபாட்டில் இருந்த விநாயகர் உலோகச் சிலைகளை மீட்டுள்ளனர்.

 

அதேபோல், கடந்த 16.12.2021 அன்று தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான தொன்மையான சுமார் ஒரு கோடிக்கு மேல் மதிப்புடைய சண்டிகேஸ்வரர் சாமி சிலை, கீழ்மனக்குடி விஸ்வநாத ஸ்வாமி கோவிலைச் சேர்ந்த சிலை ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டன. மேலும் கும்பகோணம் கூடுதல் அமர்வு, 17 சிலை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 39 சிலைகளும் வெவ்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை MLAT (Mutual Legal Assistance Treaty) மற்றும் LR (Letter of request) மூலம் மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

 

சன்னாசி பனங்குடி தாளரணேசுவரர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆடிப்பூர அம்மன், விநாயகர் ஆகிய சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்