Skip to main content

திருவண்ணாமலை கோவிலுக்காக போராடிய கலைஞருக்கு சிலை! 

Published on 11/07/2022 | Edited on 11/07/2022
A statue for the Kalaignar who fought for the Tiruvannamalai temple!

 

திருவண்ணாமலை – வேலூர் – காஞ்சி சாலை இணையும் இடத்தில் அண்ணா நுழைவாயில் மேற்குப்புறம் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞரின் எட்டு அடி உயர வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் நாத்திகருக்கு சிலைவைத்தால் கிரிவலம் வரும் லட்சக் கணக்கான பக்தர்கள், ஆன்மீகவாதிகள் மனம் புண்படும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஒருவர். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாத்திகருக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சிலை எதற்கு எனக் கேள்வி எழுப்பினார் பாஜக தேசிய நிர்வாகியான எச்.ராஜா.

 

 
கலைஞர் நாத்திகராக இருந்தாலும் ஆன்மீகவாதிகளையும், ஆன்மீக நம்பிக்கையாளர்களையும் வெறுத்தவரல்ல. அதனால்தான் அவரை தேடிவந்து சந்தித்தார்கள் புட்டர்பதி சாய்பாபாவும், கேரளா அமிர்தானந்தமாயி, திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவில் அர்ச்சகர்கள். அரசியல் செய்யாத ஆன்மீகவாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்கு தெரியும் ஓடாத திருவாரூர் ஆழித் தேரை ஓடவைத்தவர் கலைஞர் என்பது. அப்படிப்பட்ட கலைஞர் தான் திருவண்ணாமலை கோவிலை காப்பாற்றியவர் என்பது இன்று பலருக்கு தெரிவதில்லை. 

 


2002ம் ஆண்டு, இந்திய ஒன்றியத்தை பாஜக ஆட்சி செய்துகொண்டு இருந்தது. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் தொல்பொருள் துறை அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த்சிங். கிரிவலப்பாதையில் உள்ள பிரபல ஆசிரமத்தின் நிகழ்ச்சிக்கு வந்தவரிடம், அண்ணாமலையார் கோவில், 14 கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப்பாதை, 2663 அடி உயரம் உள்ள மலையை தொல்பொருள் துறை கையகப்படுத்தவேண்டும் என மனு தந்தது அந்த ஆசிரமம். கோவிலை வந்து பார்வையிட்டவர், அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். டெல்லி சென்ற ஒன்றிய அமைச்சர், அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள்துறை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட செய்தார். இதுகுறித்து மக்கள் கருத்து சொல்லலாம் என்றும் அறிவிப்பு வெளியானது. 

 


கோவில் தொல்பொருள்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றால், பூஜை விவகாரம் முதல் அனைத்திலும் ஒன்றிய அரசின் அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல் சிறு துரும்பையும் கோவிலுக்குள் நகர்த்தமுடியாது என அனைத்து பாதகங்களும் மக்களிடம் பரவியது. இதனால் அதிர்ச்சியான மக்கள், தன்னெழுச்சியாக எதிர்ப்புக்காட்டினர். கோவில் மீட்புக்குழு உருவாக்கப்பட்டு அனைத்து சமயத்தினரும் இணைந்து அண்ணாமலையார் கோவிலை பாதுகாக்க உண்ணாவிரதம், மனிதசங்கிலி, ஆர்ப்பாட்டம், போராட்டம் எனத் தொடர்ச்சியாக நடத்தினர். தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றதில் வழக்கு தொடுக்கப்பட்டது. மக்கள் போராட்டம், சட்ட போராட்டம் என ஒருசேர நடக்க துவங்கியது.

 


2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரத்துக்காக திருவண்ணாமலை நகருக்கு வந்தார் திமுக தலைவராக இருந்த கலைஞர். எங்கள் கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து திருவண்ணாமலை கோவிலை மீட்டு தருவேன் என மக்கள் முன்பு வாக்குறுதி அளித்தார். காங்கிரஸ் தலைமையிலான திமுக கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கலைஞர் வலியுறுத்தி, அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள் துறை கையகப்படுத்தும் அறிவிப்பினை திரும்ப பெறவைத்தார். இதற்காக திருவண்ணாமலை நகர மக்கள் சார்பாக அவருக்கு நன்றியும் தெரிவித்தனர். போராட்டக்குழு, ஆன்மீகவாதிகள் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். நீதிமன்றம் கோவில் வளர்ச்சிக்காக குழு அமைத்து உத்தரவிட்டது. ஒன்றிய அரசின் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டுக்குள் செல்லவிருந்த கோவிலை மீட்டவர் கலைஞர். அதுமட்டுமல்ல,1988ல் அன்றைய வடாற்காடு அம்பேத்கர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டது.

 


பிரிக்கப்பட்ட மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்ட முடிவு எடுத்தபோது, அதிகாரிகள் கிரிவலப்பாதையில் அரசு கலைக்கல்லூரி எதிரே கட்ட முடிவு செய்து கோப்புகள் தயாரித்து அனுப்பினர். இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் ஆன்மீகவாதிகள் கோரிக்கையை ஏற்றுக் கிரிவலப்பாதையில் அமைய இருந்த ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தினார். அந்த கலைஞரின் சிலைதான் தற்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையைப் பார்த்தபடி, நகர எல்லையில் அமைக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.