State level election - P. Chidambaram's candidature petition!

Advertisment

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க. கூட்டணி நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும், அ.தி.மு.க. இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் கைப்பற்றும். அந்த வகையில், தி.மு.க. மூன்று இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் ப.சிதம்பரம் தனது வேட்பு மனுவை, சட்டமன்றச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் இன்று (30/05/2022) மதியம் 12.00 மணிக்குவழங்கினார். வேட்பு மனுத்தாக்கலின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கார்த்தி சிதம்பரம் எம்.பி., கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisment

ஏற்கனவே, ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். முதன்முறையாக தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக ப.சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.