Skip to main content

மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசைக் கட்டுப்படுத்தும்! - உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு!

Published on 06/02/2021 | Edited on 07/02/2021

 

 

state human rights commission chennai high court judgement


மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசைக் கட்டுப்படுத்தும் என்பதால், அவற்றை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

 

மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மாநில மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தும், மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கிறது.

 

இந்த உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ‘மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசைக் கட்டுப்படுத்துமா? பரிந்துரைகள்  அமல்படுத்தப்படுவதைத் தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்குமாறு, நேரடியாக மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?’ என்பன உள்ளிட்ட கேள்விகளுக்குத் தீர்வு காண, இந்த வழக்குகள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் மற்றும் எம்.சுந்தர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தார்.

 

அதன்படி, இந்த வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், ‘மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு என்பது அரசைக் கட்டுப்படுத்தக்கூடியது. அதை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும். மேலும், மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்தத் தவறினால், ஆணையம் நீதிமன்றத்தை அணுகலாம். எக்காரணத்தைக் கொண்டும், மனித உரிமை ஆணையப் பரிந்துரைகளைத் தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. அதே நேரத்தில், ஆணைய உத்தரவுகளை எதிர்த்து, அரசும் நீதிமன்றத்தை நாடலாம். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்படும் உத்தரவில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே இழப்பீட்டை வசூலித்துக் கொள்ளலாம். எவ்வளவு தொகை மற்றும், கால நிர்ணயம் குறித்தும், உரிய நோட்டீஸ் அனுப்பி முடிவுசெய்து கொள்ளலாம். மனித உரிமை ஆணையப் பரிந்துரையின் பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்’ என உத்தரவிட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்