State Education Policy Ready; Report submission

மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்திருந்த தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு மாநிலத்திற்கான கல்விக் கொள்கை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 2022 ஜூன் 1 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழு மாநில அரசுக்கான கல்விக் கொள்கையை வடிவமைக்க கருத்துக்கள் கேட்பதோடு, பரிந்துரைகளை வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

Advertisment

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலுஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது அக்குழு மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையைத்தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டு, அக்கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கை தற்போது தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழில் 600 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட அறிக்கையில் நீட் தேர்வு இருக்கக் கூடாது;இருமொழி கொள்கையே தொடரவேண்டும்; கல்லூரிகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமின்றி, பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும்; 3, 5, 8வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படக் கூடாது உள்ளிட்ட பரிந்துரைகள் மாநில கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.