Skip to main content

இந்த அரசு இயற்கை வளங்களை அழித்து வருகிறது! - அன்புமணி குற்றச்சாட்டு!!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
anbumani


வைகையைக் காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற முழக்கத்தோடு வைகை ஆறு விழிப்பு உணர்வு பிரசாரத்தில் இறங்கியுள்ளார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இந்த விழிப்பு உணர்வு பிரசாரத்தின் துவக்க நிகழ்வாக வைகை ஆறு உருவாகும் இடமான தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலையின் அடிவாரமான வாலிப்பாறைக்குச் சென்று அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். அப்போது பத்திரிகையாளர்ளிடம் பேசிய அன்புமணியோ...
 

anbumani


இந்த மேகமலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக மரம் வெட்டப்பட்டதால் வறட்சி ஏற்பட்டு வைகை ஆற்றுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனது எனவே மேகமலை வன உயிரினக் காப்பகத்தைப் புலிகள் சரணாலயமாக மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றும்போது மரம் வெட்டுவதும் மரக்கடத்தலும் வனத்துக்குள் ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்படும். தமிழக அரசு இயற்கை வளங்களை அழித்துக்கொண்டு இருக்கின்றது. திருச்சி முக்கொம்பு பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்றதாலே ஷட்டர் மற்றும் பாலம் பகுதிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
 

anbumani


கேரள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதுதான் காரணம் என கேரளா அரசும் கேரள அரசியல்வாதிகளும் பொய் பிரச்சாரம் பரப்பி வருகின்றனர். அதற்கு தமிழக அரசு எந்த ஒரு பதிலும் கூறாமல் இருக்கின்றது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைத் தமிழக அரசு 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
 

anbumani


அதன்பின் அப்பகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த அன்புமணி ராமதாஸ் அந்த மக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார். அதன் பிறகு அங்கிருந்து தனது பிரசார பயணத்தைத் தொடங்கியவர் வைகை ஆறு பயணிக்கும் பாதைகளான வருசநாடு, மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி வழியாக வைகை அணைக்குச் சென்று அணையைப் பார்வையிட்டார் அதன் பின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு மறுநாள் 2ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு விரகனூர், திருப்புவனம், பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக வைகை ஆறு, தனது பயணத்தை நிறைவு செய்யும் இடமான ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தனது பிரச்சார பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்