Skip to main content

மோடி எனக்கு என்ன இடைஞ்சல் கொடுத்தார்? கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
Stalin's speech in kolkata


திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.க அரசுக்கு எதிராக இன்று (19-01-2019) கொல்கத்தாவில் கூட்டிய அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்டக் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
 

கூட்டத்தில் பேசிய அவர், 
 

வங்கத்துப் புலிகளே!
 

உங்களுக்கு தமிழ்நாட்டு ஸ்டாலினின் அன்பு வணக்கங்கள்!
 

பல நூறு மைல்கள் தாண்டி உங்களைக் காண வந்திருக்கிறேன். தூரமாக நாம் இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் தான் இருக்கிறோம். கொல்கத்தா - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்திருக்கிறது.
 

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, இரும்புப் பெண்மணி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன்.
 

தமிழுக்கு மிக நெருக்கமான ஒரு மொழி உண்டென்றால் அது வங்கமொழி தான். தமிழில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட அயல் மொழிகளில் முக்கியமானது வங்கமொழி. வங்கத்து விவேகானந்தருக்கு எங்கள் குமரியில் நினைவகம் அமைத்துள்ளோம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தனது சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தை அமைக்க நிதி திரட்ட தமிழகம் தான் வந்திருந்தார். எங்கள் தமிழ்க்கவி பாரதியார் தனது குருவாக ஏற்றுக்கொண்டது வங்கத்தில் வாழ்ந்து வந்த ஐரிஷ் பெண்மணியான நிவேதிதாவைப் பார்த்துத் தான். வங்கத்து நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்றார். இப்படி அரசியல், இலக்கியம், ஆன்மிகம் அனைத்திலும் தமிழர்களும் வங்காளிகளும் சகோதர, சகோதரிகள்.
 

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த வீரம் மிக்க இனங்களில் வங்கமும், தமிழகமும் முக்கியமானது. இதோ இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன்.
 

வங்கத்துப் புலிகளே!
 

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தான் மே மாதம் நடக்க இருக்கும் ஜனநாயகப் போர்க்களம். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து, மக்களிடம் மோதல் போக்கை உருவாக்கி, மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் நச்சு சக்திகளான பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து நாட்டை மீட்பதை தான் சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிறேன். இந்த மேடையில் நான் இந்தியாவைப் பார்க்கிறேன். வேறு வேறு மொழியைச் சேர்ந்தவர்கள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வேறு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனாலும் நம்முடைய சிந்தனை ஒன்று தான் “பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும். நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்”.


 

Stalin's speech in kolkata


‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதைத்தான் நமது முன்னோர்கள் இந்தியாவின் தாரக மந்திரமாகச் சொன்னார்கள். ஆமாம் நாம் வேறு வேறாக இருந்தாலும் நம்முடைய லட்சியம் ஒன்றுதான். இந்த ஒற்றுமை மட்டும் நம்மிடம் இருக்குமானால் வெற்றி நமக்குத்தான். தோல்வி நரேந்திர மோடிக்குத்தான்.
 

சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் நரேந்திரமோடி என்ன சொல்லி வந்தார், தனக்கு எதிரியே இல்லை என்று சொல்லி வந்தார். எதிரிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். ஆனால் சில வாரங்களாக அவர் எதிர்க்கட்சிகளைத்தான் விமர்சனம் செய்து வருகிறார். எந்தக்கூட்டமாக இருந்தாலும் மைக் பிடித்ததும் எதிர்க்கட்சிகளைத்தான் திட்டுகிறார். நாம் ஒன்று சேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதை விட பயமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் நாம் வீழ்ந்து போவோம் என்பது நரேந்திரமோடிக்குத் தெரிந்துள்ளது. அதனால் தான் தினமும் கோபத்தால் நம்மை திட்டுகிறார். பயத்தால் புலம்புகிறார். இந்த மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் இங்கு வர முடியாத தலைவர்களுக்கும் இந்தக் கூட்டணிக்குள் வர தயங்கிக் கொண்டு இருக்கும் தலைவர்களுக்கும் நான் சொல்வது இதுதான்....
 

நம்முடைய ஒற்றுமை நரேந்திரமோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. ஒற்றுமையைக் காப்போம். அதன் மூலம் இந்தியாவைக் காப்போம் என்பதுதான்.
 

என்னிடமே சிலர் கேட்கிறார்கள்...
 

நரேந்திரமோடியை நீங்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் என்று, அவர் உங்களுக்கு என்ன இடைஞ்சல் கொடுத்தார் என்று கேட்கிறார்கள். எனக்கு ஒருவர் உதவி செய்கிறாரா, இடைஞ்சல் செய்கிறாரா என்பது முக்கியமல்ல. நாட்டு மக்களுக்கு ஒருவர் உதவி செய்கிறாரா இடைஞ்சல் செய்கிறாரா என்பதுதான் முக்கியம். நான் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி. 100 கூட்டம் பேசினார். 1000 பொய்களைச் சொல்லி இருப்பார்.
 

அவர் சொன்ன பொய்களில் மிகப்பெரிய பொய், நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டாரா? இந்திய மக்கள் தலையில் கல்லைத்தான் போட்டார். வாயில் மண்ணைப் போட்டார். மொத்தத்தில் நாட்டு மக்களை குழிக்குள் தள்ளினார்.
 

பெட்ரோல் விலை உயர்ந்தது.
 

டீசல் விலை உயர்ந்தது.
 

சிலிண்டர் விலை உயர்ந்தது.
 

காய்கறி விலைகள் உயர்ந்தது.
 

மளிகைச் சாமான்களின் விலை உயர்ந்தது.
 

வேலைவாய்ப்பின்மை உயர்ந்தது.
 

பசியால் துன்பப்படுவோர் கணக்கு உயர்ந்தது.
 

குடிசையில் வாழ்வோர் எண்ணிக்கை உயர்ந்தது.
 

- இதுதான் உலகம் சுற்றும் பிரதமரின் சாதனைகள். இப்படி ஒரு மனிதர் இன்னொரு முறை இந்தியாவை ஆள்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்.
 

இது யாருக்கான ஆட்சி? கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி. பெரும் நிறுவனங்களுக்கான ஆட்சி. பெரு முதலாளிகளுக்கான ஆட்சி. மக்களுக்கான ஆட்சி அல்ல. இன்னும் சொன்னால், இந்திய அரசாங்கத்தை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக நரேந்திர மோடி ஆக்கிவிட்டார். கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி இது. இதற்கு எதற்கு நாம் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.


 

Stalin's speech in kolkata



இதனை தமிழ்நாட்டில் நான் பார்த்தேன். இப்போது இதோ கொல்கத்தாவிலும் பார்க்கிறேன். எனது ஆட்சி தான் ஊழல் இல்லாத ஆட்சி, எந்த ஊழல் புகாரும் யாராலும் சொல்ல முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன்னால் நரேந்திரமோடி சொல்லி இருக்கிறார்.
 

நரேந்திரமோடி இந்தியாவில் இருக்கிறாரா வெளிநாட்டில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ரஃபேல், ரஃபேல் என்று ஆறு மாதமாகச் சொல்லி வருகிறோமே? அது ஊழல் இல்லாமல் வேறு என்ன?  அரசாங்க நிறுவனத்துக்குக் கொடுக்காமல் தனியார் நிறுவனம் பயன் அடைய கொடுப்பது ஊழல் இல்லாமல் வேறு என்ன? விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முன் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். இது ஊழல் இல்லாமல் வேறு என்ன?
 

லலித் மோடியை இந்தியாவை விட்டு தப்பிக்க விட்ட அமைச்சர் சுஸ்மா சுவராஜின் செயல்கள் ஊழல் இல்லையா? நீரவ் மோடியை தப்ப விட்டது ஊழல் இல்லையா? 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ததன் பின்னணியில் ஊழல் இல்லையா? இது இந்திய வரலாற்றின் கறுப்பு தினம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னாரே? யாருக்காக ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
 

ஊழலைப் பற்றி நரேந்திரமோடி பேசலாமா?
 

நரேந்திர மோடியின் ஆட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதைப் போல, ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும், அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழி வகுக்கும் என்பார்கள். அதுதான் நரேந்திரமோடி ஆட்சியில் நடக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும். அதனை நீங்கள் உணர்ந்து இங்கு கூடி இருக்கிறீர்கள்.
 

இப்படிப்பட்ட உணர்ச்சி மயமானகூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு நன்றி.
 

நரேந்திர மோடி ஒரு சிலரைப் பார்த்தால் பயப்படுவார். அப்படி நரேந்திர மோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி அவர்கள். மேற்கு வங்கத்துக்குள் வருவதற்கு மோடியும் அமித்ஷாவுமே பயப்படுவார்கள்.  அந்தளவுக்கு இரும்புப் பெண்மணியாக இருக்கக் கூடியவர் மம்தா பானர்ஜி அவர்கள்.
 

எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் கொண்டவர் மம்தா பானர்ஜி அவர்கள். கலைஞர் அவர்கள் மறைந்த போது உடனேயே தமிழகத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தியவர் மம்தா. அப்படிப்பட்டவர் அழைப்பை எப்ப்போதும் நான் ஏற்பேன். அந்த அடிப்படையில் நான் இங்கு வந்துள்ளேன். இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நாம் அனைவரும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றாகச் சென்று மத்திய அரசுக்கு எதிரான மக்களை அணி திரட்ட வேண்டும்.
 

பா.ஜ.க வை தனிமைப்படுத்த வேண்டும். பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தனியாக இருந்து அவர்களை வீழ்த்த முடியாது. அது அவர்களுக்கு சாதகமாக ஆகிவிடும். இதனை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும்.
 

நமது ஒற்றுமை, மோடியை வீழ்த்தும்!
 

நமது ஒற்றுமை, நம்மை வெற்றி பெற வைக்கும்!
 

நமது ஒற்றுமை, இந்தியாவைக் காப்பாற்றும்!
 

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.