நெல்லையில் நேற்று கொலை செய்யப்பட்ட நெல்லை மாநகராட்சி திமுக முன்னாள் மேயர், அவரது கணவர் உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க. முன்னாள் மாநகராட்சி மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், மற்றும் அவர்கள் வீட்டு பணிப் பெண் மாரி ஆகிய 3 பேரும் நேற்று மாலை பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி ரோஸ்நகர் பகுதயில் உள்ள அவர்களது வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் 3 பேரையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து இவர்களது உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று காலை 3 பேரின் உடலும் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு உமாமகேஸ்வரி, அவரது கணவர் உடல் ரோஸ்நகரில் உள்ள அவரது மகள் இல்லத்திற்கும், பணிப் பெண் மாரியின் உடல் ஆசிரியர் காலனிக்கும் கொண்டு செல்லப்பட்டது.. பின்னர் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் உடலுக்கு தி.மு.க.வினர், அனைத்து கட்சியினர் உறவினர்கள் , பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது இல்லதிற்கு நேரில் வந்து இருவரது உடலுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.
உமாமகேஸ்வரி 1996ல் நான் சென்னை மேயராக இருந்த போது அவர் நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக பதவியேற்று மக்களுக்கு பல சிறப்பான பணிகளை செய்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவை செய்தவர், கலைஞர் பாராட்டும் வகையில் ஒரு முறை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பாவேந்தர் விருது வழங்கி பாரட்டப் பெற்றவர். நினைத்து பார்க்க முடியாத சூழலில் நேற்று மூவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த ஆட்சியில் தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது, இதற்கு முடிவே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது. படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் அவர்களது குடும்பத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறினார்.
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதி அருகே உள்ளது தென்திருப்புவனம் கிராமம். இங்குள்ள காளி என்பவரின் மகன் 23 வயதேயான பேச்சித்துரை. நேற்றைய தினம் மாலை பேச்சித்துரையும், தன் நண்பரான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவும், மதுவுடன் கஞ்சாவையும் சேர்த்தடித்தவர்களுக்குப் போதை உச்சந்தலைக்கு ஏறியிருக்கிறது.
போதையில் கண்மண் தெரியாமல் சாலையில் சென்ற பேச்சிதுரையும், சந்துருவும் வீரவநல்லூரையடுத்த வெள்ளங்குளியில் சிலருடன் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். பின்பு நெல்லை - அம்பை நெடுஞ்சாலையில் வெள்ளாங்குழிப் பகுதியில், பால வேலையில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் வம்பிற்கு இழுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி பேசி வீண் தகராறு செய்தவர்கள் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி அதன் கண்ணாடியை உடைக்க காரில் வந்தவர்கள் அலறித் தப்பியிருக்கிறார்கள்.
பின்பு மறுபடியும் பாலக்கட்டுமானப் பக்கம் சென்றவர்கள் மீண்டும் தொழிலாளர்களிடம் வம்புத் தகராறு செய்ய, அங்கு பணியிலிருந்த மேஸ்திரியான விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவர்களைக் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமான பேச்சித்துரையும் சந்துருவும் சேர்ந்து அரிவாளால் கருப்பசாமியை வெட்டியிருக்கிறார்கள். இதில் கருப்பசாமியின் பின் தலையில் ஆழமான வெட்டு விழ ரத்தம் பீறிட கதறி வீழ்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டுச்சம்பவம் நடக்கும்போதே அதனைத் தடுக்கப் பாய்ந்த சக தொழிலாளருமான மூலச்சி கிராமத்தின் வெங்கடேஷ் என்பவரை அரிவாளால் தாக்கியவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பியிருக்கிறார்கள்.
வெள்ளாங்குழி வழியாகச் சென்ற இருவரும் எதிரேவந்த வீரவநல்லூர் செல்லும் அரசுப் பேருந்தை அரிவாட்கள் முனையில் நிறுத்தியவர்கள் கண்ணாடியை உடைத்து டிரைவரையும் வெளியே இழுத்துப் போட்டு வெட்ட முயன்றுள்ளனர். அப்போது மிரண்டு போன பயணிகளில் சிலர் சுதாரித்துக் கொண்டு அதனைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓடிய டிரைவரை இரண்டு பேர்களும் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை அரிவாட்களால் ஓங்கிய படியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். மாலை நேரம் அந்தச் சாலையே இதனால் பதட்டமாகியிருக்கிறது. ஆனாலும் வெறியில் கத்தியபடியே இருவரும் தாமிரபரணி ஆற்றுக்கரையை நோக்கிப் போன தகவல் வீரவநல்லூர் போலீசுக்குத் தெரியவர, தாமதம் செய்யாமல் காவலர் செந்தில்குமாரும், மற்றொரு காவலரும் பைக்கில் அவர்களைப் பிடிப்பதற்காக விரைந்தனர்.
ஆற்றாங்கரையோரம் அவர்களை போலீசார் இருவரும் மடக்கிபிடிக்க முயற்சி செய்த போது, எதிர்பாராத வகையில், இருவரும் மூர்க்கத்தனமாக காவலர் செந்தில்குமாரை மடக்கி அரிவாளால் அவரின் கையை வெட்டிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். சக காவலர் உட்பட சிலர் காயமடைந்த காவலர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
காவலர் வெட்டப்பட்டது ரவுடிகளின் அட்டகாசம் பற்றிய தகவல் மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனுக்குத் தெரியவர உடனடியாக அவர் தன்னுடைய தனிப்படையை அனுப்பியிருக்கிறார்.
தாமிரபரணிக் கரையில் பதுங்கிய அவர்களை தனிப்படையினர் தேடி சலித்தெடுத்ததில் அவர்கள் முக்கூடல் பக்கமுள்ள சாலையினருகேயுள்ள மருதூர் வாழைத் தோப்பில் பதுங்கியிருந்தது தெரியவர அவர்களை தனிப்படை ரவுண்ட்அப் செய்திருக்கிறது. அவர்களைப் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பியோடியிருக்கிறார்கள். விடாமல் துரத்திய தனிப்படையினர் எச்சரித்தும் அவர்கள் தப்பியோட பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்திருக்கிறார்கள். இதில் அவனது சகா சந்துரு லாவகமாகத் தப்பியோடியிருக்கிறான். ரவுடி பேச்சித்துரையை மீட்ட போலீசார் முக்கூடலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு அவருடைய காலில் உள்ள குண்டு அகற்றப்பட்டிருக்கிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு பேச்சித்துரையை அனுப்பிவைத்திருக்கின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசன். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர் செந்தில் குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். வெள்ளாங்குழியில் காரை மறித்து தகராறு செய்தவர்கள் கருப்பசாமி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு ஸ்ரீ பத்மநல்லூர் பக்கம் பொது மக்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள் தற்காப்பிற்காக காவலர், பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்தனர். சந்துருவைக் கைது செய்திருக்கிறோம் என்றார் எஸ்.பி.
இளவயதான பேச்சித்துரையும், சந்துருவும் நண்பர்கள். வேலையற்ற இவர்களிடம் போதைப் பழக்கம் தொற்றியிருக்கிறது. மதுவுடன் சேர்த்து கஞ்சா அடிக்கும் பழக்கம் ரெகுலராம். அதிலும் கஞ்சாவைக் கசக்கி விட்டால் பேச்சித்துரைக்கு போதை, உச்சிமண்டைக்கு ஏறி மூளையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடுமாம். நாடி, நரம்பு, ரத்தம், புத்தி, சதைகளில் போதை ஏறி சைக்கோவாகவே மாறிவிடுவானாம் இதனால் தான், என்ன செய்கிறோம் என்று அவனுக்கே தெரியாமல் போய்விடுமாம். அந்த லெவலுக்குப் போனவன் வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது அடிதடி என்றாகி கொலை வரை போயிருக்கிறது. முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூர் காவல் நிலையங்களில் பேச்சித்துரை மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்காகி காவல் நிலைய ரவுடி பேனலிலும் இடம் பிடித்துள்ளான். இந்த அடாவடி காரணமாக அடிக்கடி அரசு விருந்தாளியாகப் போய்வரும் ரவுடி பேச்சிதுரையின் மீது குண்டாசும் பாய்ந்திருக்கிறது என்கிறார் அந்தப் பகுதியின் மூத்த காவலர் ஒருவர்.
ரவுடி பேச்சித்துரையைப் போன்று இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி முக்கூடல், வீரவநல்லூர் மற்றும் சேரன்மகாதேவி சுற்றுப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்படி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள் என்கிறார்கள் பகுதிவாசிகள்.