Skip to main content

டெல்லியில் இருப்பது மோசடி ஆட்சி; தமிழகத்தில் கூலிப்படை ஆட்சி! மு.க.ஸ்டாலின் அதிரடி!!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019

டெல்லியில் இருப்பது மோடி ஆட்சியல்ல; அது மோசடி ஆட்சி. அதுபோல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் கூலிப்படை ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி, அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு சனிக்கிழமை (பிப்ரவரி 9, 2019) மாலையில் நடந்தது. அந்த அமைப்பின் தலைவர் அதியமான் தலைமை வகித்தார். மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றினார். அவர் பேசியது:

 

 

stalin

 

ஆதித்தமிழர் பேரவை மாநாட்டிற்கு நான் வந்திருப்பதை எண்ணி யாரும் ஆச்சர்யப்படத் தேவையில்லை. இங்கே வருவதை கடமையாக கருதி வந்திருக்கிறேன். அருந்ததியர் இயக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் எப்போதுமே நெருக்கமான தொடர்பு உண்டு. ஒருமுறை தந்தை பெரியாரிடம், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த  ஒருவர், நாங்கள் திராவிடர் கழகத்தில் சேர்ந்துவிடுவதால் எங்களுக்கு என்ன பயன்? என்று கேட்டார். மேலும் அவர், திராவிட நாடு கிடைத்துவிட்டால் அப்போது எங்களுக்கு என்ன பயன்? என்றும் கேட்டார்.  

 

அதற்குத் தந்தை பெரியார் சிரித்துக்கொண்டே, 'உங்களுக்கு இழப்புதான்' என்று பதில் அளித்தார். அதைக்கேட்டு அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், உங்கள் சமூகத்தின் பெயரில் இருக்கும் ஆதிதிராவிடர் என்ற சொல்லில் இருந்து ஆதி நீங்கி, திராவிடர் ஆகிவிடுவீர்கள் என்று பெரியார் பதில் சொன்னார். இப்படிச் சொன்னதும் அந்த நபர் உடனடியாக திராவிடர் கழகத்தில் இணைந்து கொண்டார். 

 

நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். தமிழினத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வு வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர், நான் சீமான் வீட்டுப்பிள்ளை அல்ல; சாமானியன் வீட்டுப்பிள்ளை என்று அடிக்கடி சொல்வார். அதனால் திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் கலைஞர் சாமானியர்கள் மீது அதிக அக்கறை செலுத்தினார். 

 

 

stalin

 

கடந்த 2008ல் திமுக ஆட்சியின்போது, அருந்ததியர் சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிட்டார். இது குறித்து ஆய்வு செய்ய, நீதியரசர் ஜனார்த்தனன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் கலைஞர். அந்தக்குழுவின் அறிக்கை கைக்கு கிடைத்த ஐந்தே நாள்களில் அமைச்சரவையைக் கூட்டி, உடனடியாக ஒப்புதல் பெற்றார். அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

 

 

அவர் படுத்த படுக்கையாக இருந்தபோதும்கூட அருந்ததியர் சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்றும் எந்த வகையிலும் தாமதம் ஆகிவிடக்கூடாது என்றும் கருதி, துணை முதல்வராக இருக்கும் நீ போய் அதற்கான பணிகளை செய்து முடி என்று என்னை அனுப்பி வைத்தார். அதன்பிறகு 2009ம் ஆண்டு, பிப்ரவரி 26ம் தேதி, அருந்ததியினர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு மசோதாவை சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிக் காட்டினேன். அந்த இறுமாப்புடனும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

 

 

ஆனால் இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு பின்பற்றவில்லை. விரைவில் நாடாளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வரும். அல்லது, பொதுதேர்தலேகூட வரலாம். அதில் மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி  வைக்கப்படும்.

 

 

இன்றைக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு அடித்தட்டு மக்களைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் மோடி அரசு...அதை மோடி அரசு என்று சொல்லமாட்டேன். மோசடி அரசு என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்குவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். இதே உறுதிமொழியைத்தான் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சொன்னார்கள். விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதா என்றால் இல்லை. உண்மையில் விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்கு சரிந்திருக்கிறது. டெல்லியில் விவசாயிகளை அரை நிர்வாணமாகப் போராட விட்டதுதான் மோடி அரசு செய்த ஒரே சாதனை. 

 

 

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வரும் வகையில் திட்டமிடுகிறார்கள். குட்டிக்கரணமே போட்டாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது. காலே இல்லாதபோது எப்படி ஊன்ற முடியும்?

 

 

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவதாகவும், முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இந்த கரிசனம் வர வேண்டியதன் அவசியம் என்ன? இது ஓட்டுக்காக தரப்படும் லஞ்சம். இதே தந்திரத்தைதான் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பதிலும் பின்பற்றுகிறது பாஜக. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் அதாவது மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் எல்லோரும் ஏழைகள் என்கிறது பாஜக. 

 

 

உயர்சாதியினரின் வாக்குகளைப் பெற்றாக வேண்டிய தந்திரத்துடன் பாஜக செயல்படுகிறது. முகத்தில் குத்துவது போலதான் மோடி வருவார். ஆனால், வயிற்றில் குத்தி விடும் தந்திரம் படைத்தவர் மோடி என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். மோடி, இந்துக்களுக்கு மட்டும்தான் கருணை காட்டுவதாக நினைத்துவிட வேண்டாம். அதிலும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும்தான் அவர் கருணை காட்டுவார். மத்தியிலே இருப்பது மோடி பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆட்சிதான். 

 

மத்தியிலே கார்ப்பரேட் ஆட்சி என்றால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூலிப்படை ஆட்சிதான் நடத்துகிறார். எதிலும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று ஊழல் செய்து வந்த எடப்பாடி, இப்போது கொலை வரை செய்யத் துணிந்துவிட்டார். யாரின் பெயரால் ஆட்சி நடத்துகிறாரோ அவர் ஓய்வு எடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டின் காவலாளியை கொன்றுவிட்டார். அதை மறைக்க அடுத்தடுத்த கொலைகள் என ஐந்து கொலைகளை அரங்கேற்றியிருக்கிறார். 

 

இதையெல்லாம் யாரை வைத்து செய்தாரோ அவர்களே இன்று பகிரங்கமாக எடப்பாடி மீது குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கின்றனர். அவர்கள் இனிமேல் பேட்டி கொடுக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கினார். இதிலிருந்தே பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதை நாம் அறிந்து கொள்ள முடியும். அவர்களின் குற்றச்சாட்டுக்கு இதுவரை எடப்பாடி பழனிசாமி சரியாக பதிலைச் சொல்லவில்லையே ஏன்?

 

 

ஏழு முறை சிறை சென்றிருப்பதாக எடப்பாடி சொல்கிறார். எதற்காக சிறை என்று பட்டியலிட முடியுமா? ஏழு முறை சிறை சென்றிருந்தால் எதற்கும் துணிந்து விடலாம் என்று அர்த்தமா? ஜெயலலிதாவிடம் காரோட்டியாக இருந்த எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் மர்மமான முறையில் இறந்து போனார். அவரை எடப்பாடி பழனிசாமிதான் கொலை செய்தார் என்று கனகராஜின் அண்ணன் தனபால் சொல்கிறார். ஏன் இதுவரை அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை?

 

 

கிராமங்களில், 'கடப்பாரையை விழுங்கிவிட்டு கம்முனு இருக்கிறான் பாரு' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் எதுவுமே நடக்காததுபோல் எடப்பாடி பழனிசாமி சாமர்த்தியமாக இருக்கிறார். அந்த சாமர்த்தியத்தனத்தில் 5 சதவீதம் அளவுக்காவது மக்கள் நலனைப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா? ஆனால், திமுகவுக்கு எப்போதும் மக்களைப் பற்றிய கவலைதான் இருக்கும். 

 

 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தீரன் சின்னமலை படைத்தளபதியாக இருந்த பொல்லானுக்கு நினைவு மண்டபமும், நினைவுச்சின்னமும் அமைக்கப்படும். இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் ராஜேந்திரன் எம்எல்ஏ, எஸ்ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, எஸ்ஆர்.பார்த்திபன், வி.பி.துரைசாமி மற்றும் எ.வ.வேலு, ஆ.ராஜா, செந்தில்பாலாஜி, கொங்குமக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.