Skip to main content

'' இந்து, ராம்''-ஐ வைத்து ஆட்சிக்கு வந்த பாஜக இந்து.ராமை கண்டு பயப்படுகிறது- ஸ்டாலின்

Published on 13/03/2019 | Edited on 13/03/2019
STALIN

 

நாகர்கோவிலில் காங்கிரஸ் பிரச்சார கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,

 

இந்திய தேசம் மத சார்பற்ற,பாதுகாப்பான பலம் உள்ள தேசமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவேதான் யாரும் சொல்வதற்கு முன்னால் நான் துணிச்சலுடன் சொன்னேன்.  அடுத்த பிரதமர் ராகுல்தான் என்று. இன்னும் சில வாரங்களில் ராகுல்தான் இந்திய பிரதமர். ஒளிமயமான இந்தியாவை தாருங்கள் ஏனெனில் இப்போது இந்தியா மோடி ஆட்சியில் ஒளியிழந்து இருள்மையமாக காணப்படுகிறது. ஆட்சிக்கு வந்ததும் வங்கியில் கருப்புப்பணத்தை வெளிகொண்டுவந்து மக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என கூறிய மோடி அரசு இதுவரை 15 ஆயிரம் அல்ல 15 ரூபாய்கூட தரவில்லை. ஊழலே இல்லை என சொன்ன ஆட்சியில்தான் ரஃபேல் ஊழல் நடந்துள்ளது. 41 சதவிகிதம் விலையை கூட்டி வாங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் இந்த ஆதாரத்தை அம்பலப்படுத்தியவர் இந்து ராம். ஆவணத்தையும், அனைத்தையும் திருடிவிட்டதாக சொல்கிறார்கள். இதற்காக இந்து ராம் மிரட்டப்படுகிறார். ஆனால் அவர் பயப்படவில்லை. இந்து ராமுக்கு திமுக சார்பில் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். மோடி அவர்களே உங்களுக்கு எதிராக இந்துவும் மாறிவிட்டது, ராமும் மாறிவிட்டது. இந்துவையும்,ராமையும் வைத்துதான் வெற்றிபெற நினைத்தீர்கள் ஆனால் அந்த இரண்டு வார்த்தைகளை பார்த்தே பயந்துவருகிறீர்கள்.

 

இப்போது மோடிக்கு காமராஜரின் நினைவு வர தொடங்கியுள்ளது. காமராஜர் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது.1966 ல் பசுவதை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி டெல்லியில் சங்பரிவார் அமைப்பு போராட்டம் நடத்தினார்கள் அந்த போராட்டத்தில் கலவரம் உருவாக்கப்பட்டு காமராஜர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த கொடுமையை செய்தவர்கள் அவர்கள்.

 

 வெளிநாடுவாழ் பிரதமர் மோடியின் பினாமி ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பொள்ளாச்சியில் நடந்துவரும் நிகழ்வுகள், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகள்,பத்திரிகை செய்திகள்  ஆளும்கட்சியின் அக்கிரமத்தை காட்டுகிறது.

 

200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது இந்த ஆட்சி ஊழல் ஆட்சி கொலைகார ஆட்சி என்பதையும் தாண்டி கொலைகார, பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஆட்சி என்பதை நிரூபிக்கறது.

 

எனவேதான் மேற்குவங்கத்தில் நடந்த கூட்டத்தில் சொன்னேன் இது மற்றுமோர் இந்திய விடுதலை போர். அதை நாம் சந்திக்க வேண்டும் எனவே நடப்பது தேர்தல் மட்டுமல்ல ஜனநாயக போர் எனக்கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்