
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, இன்று (05.05.2021) காலை திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். மேலும், சட்டமன்ற குழு தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் அவர் வழங்கினார்.