Skip to main content

"சமூகநீதி காவலர் ஸ்டாலின் !"- இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்!

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

"Stalin, the guardian of social justice!" - The voice in the Sri Lankan parliament!

 

பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பாராட்டியிருக்கிறார். தமிழக முதல்வரின் பெருந்தன்மையான இந்த உதவியை நன்றியோடு என்றும் நினைத்துப் பார்ப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார் மனோ கணேசன். 

 

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மனோ கணேசன், "தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இலங்கையருக்கும் உதவ தீர்மானித்து, அதற்காக இந்திய ஒன்றிய அரசின் அனுமதியையும், இலங்கை அரசின் ஒப்புதலையும் பெற்றதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, எங்கள் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற கூற்றுக்கு மெய்யான சமகால அர்த்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

பொருளாதார நெருக்கடி எங்களுக்கு புதிதல்ல. வடகிழக்கில் யுத்தம் காரணமாகவும், மலைநாட்டு தோட்டங்களில் யுத்தமில்லாமலும் பல்லாண்டுகளாக இந்த “உணவில்லை, மருந்தில்லை” என்ற பொருளாதார நெருக்கடி விடயங்கள் நிலவின. ஆகவே அவை எமக்கு புதிதல்ல. ஆனால், இந்நாட்டின்  ஒட்டு மொத்த மக்களுக்கு இன்றைய நெருக்கடி புதிது. ஆகவேதான் நாடு முழுக்க போராட்டங்கள் நிகழ்கின்றன.

 

இலங்கை ஒருபோதும் இல்லாத விதத்தில் நெருக்கடியை சந்தித்த இவ்வேளையில், இதற்கு எவர் பொறுப்பு கூற வேண்டும் என இச்சபையில் சண்டை இடும் இவ்வேளையில், இருண்ட குகைக்குள் ஒரு ஒளிக்கீற்றாக நிகழ்ந்த ஒரு நிகழ்வை இந்த மாமன்றத்தின் கவனத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், தலைநகர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறைகளில் கொண்டு வர விரும்புகிறேன். 

 

இந்தியாவின் தமிழ் மாநில தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கண்ணீரால் சூழ்ந்துள்ள இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் நிவாரண உதவிகளாக அரிசி, பால்மா, மருந்து ஆகியவற்றை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கான ஒன்றைய அரசின் அனுமதியையும், இலங்கை அரசின் ஒப்புதலையும் அவர் பெற்றுள்ளார்.

 

ஆரம்பத்தில் இலங்கையில் வாழும் தொப்புள் கொடி உறவுகளான தமிழருக்கு மாத்திரம் உதவ போகின்றோம் என முதல்வர் கூறிய போது, இலங்கை வாழ் தமிழக வம்சாவளி மலையக தமிழர் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக நானும், வடகிழக்கில் வாழும் இலங்கை வம்சாவளி ஈழத்தமிழர் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக நண்பர் சுமந்திரனும், ஒரு செய்தியை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பினோம்.

 

“முதல்வர் அவர்களே, இலங்கையில் இன்று நாம் அனைவரும் நெருக்கடியில் இருக்கின்றோம். நாம் அனைவரும் போராடுகிறோம். சிங்களவர், தமிழர், முஸ்லிம்,பெளத்தர், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என்ற பேதங்களை மறக்க ஆரம்பித்துள்ளோம். ஆகவே உங்கள் உதவிகள் எமது நாட்டின் அனைவருக்குமாக அனுப்பி வையுங்கள்” என கோரினோம்.

 

முதல்வர் இதை சடுதியாக புரிந்துகொண்டு, மனதை உருக்கும் விதத்தில் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார். ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவிடுவதாக கூறினார். அது தம் கடமை என்றார். இலங்கை  நாட்டையோ, இலங்கை மக்களையோ, பிற நாட்டவராக பார்க்க தோன்றவில்லை என்றார். எங்கள் கண்கள் கலங்க அவரது உரையை நாம் செவி மடுத்தோம்.

 

தெற்கிலும், வட- கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம், சிங்கள மக்களுடனும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடனும் பின்னி பிணைந்துள்ளது. இதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படை. இதை இன்று தமிழக முதல்வர் புரிந்து கொண்டுள்ளார் என நம்புகிறேன். தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.

 

தமிழக முதல்வரின் புரிந்துணர்வு இலங்கையில் தமிழ் பேசும் மக்களும், சிங்களம் பேசும் மக்களும் சந்தோசமாகவும், சமத்துவமாகவும் வாழ வழிகாட்டும் என நான் நம்புகிறேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கடந்த 75 வருடங்களாக எதர்நோக்கும் பிரச்சினைகள் வெறும் பொருளாதார பிரச்சினைகள் மட்டுமல்ல. அவற்றையும் தாண்டிய எங்கள் மொழி, இன, மத பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு அடிப்படையாக ஒரு காரணம் இருந்தது. அந்த காரணம் எதுவென பின்னோக்கி சென்று பார்த்தால், ஒரு விடயம் தெரிகிறது.

 

அதுதான், இலங்கையில் வாழும் சிங்கள மக்களில் உறங்கும் ஒரு வரலாற்று அச்ச உணர்வாகும். இலங்கையில் 35 இலட்சம் தமிழர்கள் வாழ்ந்தாலும், சிங்கள மக்கள் எப்போதுமே தமிழர்களின் ஜனத்தொகையை கடல் கடந்து தமிழகத்தில் வாழும் எட்டு கோடி மக்களுடன் இணைத்தே பார்க்கிறார்கள். பெரும்பான்மை சிங்கள மக்களின், சிறுபான்மை மனப்பான்மையே இதற்கு காரணமாக அமைகிறது. 

 

இதற்கு இன்று தமிழக முதல்வரின் செயற்பாடு அமைந்துள்ளது.  இலங்கை மக்களின் பசியை போக்கும் அதேவேளை,  பால்குடி பாலகர்களின் அழுகையை போக்கும் அதேவேளை, நோய் நொடிகளை போக்கும் அதேவேளை, தமிழ், சிங்கள மக்களுக்கும், தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் வரலாற்றுரீதியாக நிலவிய சந்தேகங்கள், அச்சங்கள், ஆகியவற்றையும் போக்கும் பாதையில் முதல்வரின் செய்கை முதலடியாக அமைந்துள்ளது.

 

தமிழக முதல்வரின் சமூக கொள்கை, தமிழகத்திற்கு அப்பால் சென்று இந்தியா முழுக்க வாழும் மக்களை கவர்ந்துள்ளது. சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களை  அரவணைக்கிறார். இன்று அது கடல் கடந்து வந்து எங்களையும் கவர்ந்துள்ளது. மலைநாட்டின் தோட்ட  சிறைகளில் வாழும் தமிழ் மக்கள்தான் இலங்கையிலேயே மிகவும் விளிம்பு நிலையில் வாழும் மிகவும் பின்தங்கிய மக்களாக இருக்கிறார்கள். அவர்களது வாழ்விலும், முதல்வரின் சமூக நீதி கொள்கை ஒளியேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்.   

 

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும், வாழ்த்தும் அதேவேளை,அவரை நாம் “சமூக நீதி காவலன்” என்று அழைக்க விரும்புகிறோம். அடுத்த 2023ம் வருடம், தமிழக வம்சாவளி மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அது தொடர்பான எங்கள் தேசிய கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள தமிழக முதல்வரை நாம் அழைக்கிறோம். முதல்வரை நேரில் சந்தித்து அதற்கான அழைப்பை கையளிக்க நாம் எண்ணியுள்ளோம்" என்று உரை நிகழ்த்தினார் மனோ கணேசன் எம்.பி.!
 

 

 

சார்ந்த செய்திகள்