Skip to main content

“திமுக ஆட்சியைப் பார்த்து வெளிநாட்டு நிறுவனங்களே வந்து இங்கு தொழிற்சாலைகளை நிறுவினர்”- முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஸ்டாலின்

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி 14 நாட்கள் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் சென்று வந்தார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவே இந்த வெளிநாடுகள் பயணம் என்றும் கூறினார். பயணத்தை முடித்துவிட்டு வந்தபின் மீண்டும் இஸ்ரேல் செல்ல இருப்பதாக கூறினார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் முதலீட்டார்கள் கவர வெளிநாடு செல்லவில்லை, சொந்த காரணங்களுக்காவே அரசுமுறை பயணமாக சென்றிருப்பதாக விமர்சித்துள்ளார்.
 

mk stalin

 

 

சென்னையில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முதல்வர் மட்டும் வெளிநாடு சென்று வரவில்லை. அவருடன் 10-15 பேர் சென்றனர். இன்னும் 7-8 பேர் வெளிநாடு செல்லவிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. மறுபடியும் முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போகட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை.

வெளிநாட்டுக்குச் சென்றதால் முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் வந்தால் நானே பாராட்டு விழா நடத்துவதாகச் சொல்லியிருந்தேன். அதனை மறுக்கவில்லை. ஆனால், ஸ்டாலின் எங்களுக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டாம் என்று முதல்வர் கூறியிருக்கிறார். 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்'. அதனை அவரே ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்த வெள்ளை அறிக்கை கேட்டேன். அதிமுக ஆட்சியில் இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. ஜெயலலிதா ஆட்சியில் 2.42 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாக அறிவித்தனர். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், மூன்றரை லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகக் கூறினர். இதன்மூலமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றனர். அந்த ஒப்பந்தங்களில், எவ்வளவு முடிவாகியிருக்கின்றன? எத்தனை நிறுவனங்கள் வந்திருக்கின்றன? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன? எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன? இதைத்தான் வெள்ளை அறிக்கையாக வெளியிடச் சொன்னோம். அதைக்கேட்டால், அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை வெள்ளை அறிக்கை வெளியிடச் சொல்கிறார்.

திமுக ஆட்சிக்காலத்தில், துணை முதல்வராக இருந்த நான் வெளிநாடு சென்றிருக்கிறேன். முதலீட்டைப் பெறுவதற்காக அல்ல. சில அதிகாரிகளை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன். மெட்ரோ ரயில் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்றோம். ஆனால், அதிமுக ஆட்சியில் முதலீட்டைப் பெறுவதற்காக என்று நாடகம் நடத்திவிட்டுச் சென்றனர். தனிப்பட்ட விஷயங்களுக்காகச் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்படவில்லை, 14,000 கோடி ரூபாய்க்குத்தான் முதலீடுகள் வந்ததாக ஆர்டிஐ தகவலில் வெளிவந்துள்ளது. இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? அடுத்து நல்லாட்சியை ஏற்படுத்த திமுகவினர் உழைக்க வேண்டும்.

அம்பத்தூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள தொழிற்சாலைகள் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இவை வெளிநாடு சென்று பெறப்பட்டவை அல்ல. திமுக ஆட்சியைப் பார்த்து அவர்களே வந்து இங்கு தொழிற்சாலைகளை நிறுவினர்," என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.