"நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது"ன்னு எல்லோருக்கும் நல்ல சேதி சொல்லும் குடுகுடுப்பைக்காரர்களே, தங்களுக்கு யாராவது இப்போது அந்த நல்ல சேதியைச் சொல்ல மாட்டார்களா என்று தவித்துக்கிடக்கிறார்கள். ஊரே அயர்ந்து தூங்கும் நள்ளிரவிலேயே தங்கள் பணியைத் துவங்கிவிடும் இந்தச் சமூகத்தினர் ஊரடங்கினால் 50 நாட்களுக்கும் மேலாக முடங்கிக்கிடக்கின்றனர். ஆனாலும், ’நமக்கு நாமே’ என்று இவர்கள் எடுத்த முடிவுதான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் நெகிழ வைத்திருக்கிறது.
தமிழ்ச் சமூக வாழ்க்கையில் மாறாமல் இருக்கும் விசயங்களில் ஒன்று குடுகுடுப்பைக்காரர்கள். சாமக்கோடங்கிகள் என்றும் சொல்லப்படும் இவர்கள், கணிக்கர் இன பழங்குடிமக்கள். குறி சொல்லுதல் நிமித்தமாக ஊர் ஊராக நாடோடியாகச் சுற்றினாலும், கூட்டமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சொல்லும் வாக்குக்கு இப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் குறி சொல்ல புறப்படும் இவர்கள், தெருத்தெருவாகச் சென்று குறி சொல்லுவார்கள். நள்ளிரவில் சுறுக்கமாகக் குறி சொல்லிவிட்டு செல்லும் இவர்கள், மறுநாள் காலையில் அந்த வீட்டின் முன் நின்று விளக்கமாகச் சொல்லிவிட்டு, அதற்குக் காணிக்கை பெற்றுக்கொள்வார்கள். சிலர் காணிக்கையாகப் பணம் தருவார்கள். பெரும்பாலும் தானியங்கள்தான் காணிக்கையாக இருக்கும். அதைக்கொண்டுதான் இந்தச் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கத்தில் 53 கணிக்கர் இன குடும்பங்கள் 100 வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றார்கள். தற்போது 53 குடும்பத்தைச் சேர்ந்த 192 பேரும் இப்பகுதியில் கூட்டாக வசித்து வருகின்றார்கள்.
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், ஊர் ஊராகச் சுற்றிவருவதுதான் தொழில் என்றான இவர்களின் வாழ்வாதாரம் ஆடிப்போய்விட்டது. யாரும் இவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினர் மூலமாக தமிழகம் முழுவதும் உதவி வருவதை டி.வி.யில் பார்த்ததும் இவர்களுக்கு ஒரு தெம்பு வந்துவிட்டது.
இக்கூட்டத்தில் இருக்கும் குப்பன், தமிழ்நாடு கணிக்கர் இன சமூக நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர். அவர், தி.மு.க. பிரமுகரும் வழக்கறிஞருமான சசிக்குமாரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். சசிக்குமார் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரமுகர் பி.எம்.குமாரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். குப்பன் மூலமாக, குடுகுடுப்பைக்காரர்களின் நிலையை அறிந்து, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமாரிடம் முறையிட்டுள்ளார் குமார். அதோடு நில்லாமல், மாதவன் என்பவரின் மூலமாக காஞ்சிபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, 53 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி கிடைக்க முதற்கட்டமாக ஏற்பாடு செய்துள்ளார். அடுத்து, திமுக மூலமாக ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான காய்கறிகள் வாங்கி கொடுத்திருக்கிறார்.
கேட்பாரற்று கிடந்தவர்களுக்கு இந்த உதவி பெரிய உதவி என்றாலும், அது தங்கள் வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. அதனால், 53 குடும்பத்தினர் கூடி பேசி, ஒரு முடிவெடுத்தனர். அதன்படி, ஒவ்வொரு வீட்டினரும் தங்களிடம் இருந்த ஒரு கிராம், ரெண்டு கிராம், அரை கிராம் தங்க நகைகளைக் கொண்டு வந்து தலைவர் குப்பனிடம் கொடுத்தனர். மொத்தமாக சேர்ந்ததில் 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்தன. அந்த நகைகளை ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்தனர். ஒரு லட்சத்து 75 ரூபாய் பணத்தில் 53 குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பிரித்து எடுத்துக்கொண்டனர்.
இந்த நேரத்தில் பி.எம்.குமார், மீண்டும் குப்பனைச் சந்தித்து, மேற்கொண்டு உதவிகள் தேவைப்பட்டால் சொல்லுங்கள் என்று சொன்னதும், நடந்ததைக் குப்பன் சொன்னதும் ஆச்சரியப்பட்ட குமார், கடந்த மே 7ஆம் தேதி காணொளி காட்சியின் மூலமாக, ‘உங்க பகுதிக்கு என்ன செஞ்சீங்க?’என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டபோது, குடுகுடுப்பைக்காரர்களுக்குச் செய்த உதவியைச் சொல்லிவிட்டு, ‘நாமக்கு நாமே’ என்று அவர்கள் பங்கிட்டுக்கொண்ட விசயத்தையும் கூறினார். இதைக்கேட்டு நெகிழ்ந்து போன ஸ்டாலின், குடுகுடுப்பைக்காரர்கள் குப்பனையும், ஆறுமுகத்தையும் தொடர்புகொண்டு வாழ்த்துச் சொல்லிவிட்டு, மேற்கொண்டு எந்த உதவி வேண்டுமென்றாலும் தி.மு.க.வினரை தொடர்புகொள்ளுமாறு கூறினார்.
இது குறித்து நம்மிடம் பேசிய குப்பன், ‘’ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குறதால யாருமே எங்கள கண்டுக்கல. திமுக உதவி எங்களுக்கு ஓரளவு ஆறுதலா இருந்துச்சு. அதுக்குப்பிறகுதான் எங்களுக்குள்ள இருக்குறத வச்சி பங்கிட்டுக்கிட்டோம்.
எம்.ஜி.ஆருதான் எங்க மாதிரி ஏழைகள்கிட்ட பரிவு காட்டுவாரு. அதுக்குப் பிறகு கலைஞரோட பிள்ளை எங்ககிட்ட பேசுனதுல எங்களுக்கு ரொம்ப சந்தோசம். என்ன உதவின்னாலும் கேளுங்க… நானும் என் கட்சியினரும் இருக்கோம்னு அவர் சொன்னது ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. கூடிய சீக்கிரத்துல கரோனா ஒழிஞ்சி நல்ல காலம் பொறக்கும்னு ஸ்டாலின் ஐயா சொன்னாரு. நாங்களும் அந்த நம்பிக்கையிலதான் இருக்குறோம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.