இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். இலங்கை நாட்டின் 8- வது அதிபராக கோத்தபய ராஜபக்சே விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

SRILANKA ELECTION RESULT MDMK VAIKO MP PRESS MEET

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி, "இலங்கையில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள். இந்திய அரசுக்கு பொறுப்பு அதிகம் இருக்கிறது. கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்காத தமிழர்களுக்கு நன்றி. காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

Advertisment

லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தார்களே அதற்கு நீதி கிடைக்கவில்லை. எனவே இந்த நாள் தமிழினத்திற்கு துயரமான நாள். எதிர்காலத்தில் இந்திய அரசு தமிழர்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சீனத்தோடும், பாகிஸ்தான்னோடும் உறவாடி கொண்டே, இந்தியாவை ஏமாற்றி கொண்டே, தமிழர்களின் அழிவுக்கும், தமிழர்களின் இன அடையாளமே இல்லாமல் செய்வதற்கு என்னவெல்லாம் முடியுமோ, அத்தனையும் செய்வதற்கு கோத்தபய ராஜபக்சே துடித்து கொண்டு தான் இருப்பார்.

Advertisment

அதை தடுக்க வேண்டிய கடமை உலக தமிழ் இனத்திற்கு உண்டு. தாய் தமிழகத்திலே இருக்கின்ற தமிழர்களுக்கு உண்டு. தமிழக இளைஞர்களுக்கு உண்டு. நீதி ஒரு நாள் கிடைக்கும், உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்து தான் தீர வேண்டும். இசைபிரியா படுகொலை, சேனல் 4-ன் சாட்சியங்கள் இவையெல்லாம் மறைக்க முடியாதவை. இந்த சாட்சியங்கள் நம்முடைய நியாத்தை சர்வதேச சமுதாயத்தின் மனசாட்சியிடம் எடுத்து வைக்கும், அதற்குரிய சூழல் உருவாகும் என நம்புகிறேன்". என்றார்.