Skip to main content

தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்கள்;உயிர் தப்பிவந்த நாகை மீனவர்கள்!!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

இந்திய எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் அரிவாள் வெட்டு காயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சிப்பெறுகின்றனர்.

 

attack

 

நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியியைச் சேர்ந்த ராஜேந்திரன், மணிமாறன், சத்தியன், இளம்பரிதி, காளிதாஸ் ஆகிய 5 மீனவர்கள் நேற்று மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 18 கடல் நாட்டிகள் மைல் தொலைவில்  இந்திய எல்லையிலேயே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்திருந்த கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

இந்த தாக்குதல் சம்பவத்தில் மீனவர் ராஜேந்திரன் கடும் வெட்டு காயங்களுடன் மயங்கி விழுந்திருக்கிறார்.  தொடர்ந்து அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மற்றும் இதர வகை மீன்கள் மற்றும் வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் போன்ற அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தப்பி சென்றனர். 

 

உயிர் பிழைத்தால் போதும் என்கிற நிலையில் பலத்த காயங்களுடன் கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை விழுந்தமாவடி  சக மீனவர்களின் உதவியோடு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுவந்து சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள்  தாக்குதல் நடத்திய சம்பவம் நாகை கடலோரப்பகுதியில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் மீனவ கிராமங்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

" மத்திய, மாநில அரசுகள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைத்திட ஆவனம் செய்திட வேண்டும், சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ,"எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் மீனவர்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.